இந்தியாவில் அழிந்து விட்டதாக கருதப்பட்ட அரியவகை பூ 158 ஆண்டுக்கு பின் இமயமலையில் கண்டுபிடிப்பு

இடாநகர்: நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருந்து மறைந்துவிட்டதாக கருதப்பட்ட அரிய வகை இமயமலைப் பூ தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சயனந்தஸ் ஹூக்கரி என்ற ஊதா -நீல நிற பூக்களை கொண்ட இந்த தாவரம் கடந்த 1867ம் ஆண்டு சிக்கிமில் கடைசியாக ஆவணப்படுத்தப்பட்டது. இங்கிலாந்து தாவரவியலாளர் ஜோசப் டால்டன் ஹூக்கர் தனது சிக்கிம் பயணத்தின்போது இதனை ஆவணப்படுத்தினார். அதன் பின்னர் இந்த தாவரம் இந்தியாவில் இருந்து அழிந்துவிட்டதாக கருதப்பட்டது.

இந்நிலையில் அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் மாகோ கிராமத்திற்கு அருகில் உள்ள சூனா பள்ளத்தாக்கிற்கு அருகே சுமார் 3600மீட்டர் உயரத்தில் தற்போது இந்த தாவரம் 158 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய தாவரவியல் ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட கள ஆய்வின்போது இந்த தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தாவரம் பெல்ப்ளவர் குடும்பத்தை சேர்ந்தது. இந்த கண்டுபிடிப்பு ஓரிக்ஸ் என்ற சர்வதேச பாதுகாப்பு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் தாவரவியல் ஆராய்ச்சி மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய படியாக இது கருதப்படுகின்றது.

Related Stories: