தமிழக அரசு கேட்காததால் காவிரி நீரை திறந்துவிட முடியாது; கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் திட்டவட்ட அறிவிப்பு; தமிழக முதல்வர் விஜய் பதிலளிக்காமல் மவுனம்

* உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: தமிழகத்துக்கு இப்போதைக்கு நீர் தர இயலாது. நீர் திறக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த கோரிக்கையும் வரவில்லை என கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து இதுவரை தமிழக முதல்வர் பதில் ஏதும் கூறவில்லை. தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசின் செயலுக்கும், தமிழக முதல்வரின் மவுனத்துக்கும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட கட்சி தலைவர்களும் விவசாய சங்க தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக பல தசாப்தங்களாக தொடர்ந்த வழக்கில், 2018ல் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அதன்படி, கர்நாடகா தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீரை ஜூன் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் மாதம்தோறும் பிரித்து வழங்க வேண்டும். இதனை மேற்பார்வையிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 2023, 2024ம் ஆண்டுகளில் போதிய பருவமழை பெய்யாததால், கே.ஆர்.எஸ், கபினி போன்ற முக்கிய அணைகள் நிரம்பவில்லை.

இதனால் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரின் அளவை பெருமளவு குறைத்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரை வழக்கு சென்றது. இந்நிலையில், மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரைச் சேமிக்க, மேகதாதுவில் புதிய அணை கட்ட போவதாக கர்நாடகா தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. நடப்பாண்டில் கோடைக்காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் நேரத்தில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மிகவும் சரிந்தது.

இதனால் குறுவை சாகுபடி மற்றும் குடிநீர் தேவைகளுக்காக தமிழக அரசு கர்நாடகாவிடம் உரிய தண்ணீரைத் திறந்துவிடுமாறு கோரியது. இதுகுறித்து கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், ‘கர்நாடகாவில் போதிய மழை இல்லாததால் அணைகள் நிரம்பவில்லை. எனவே தமிழகத்துக்கு இப்போதைக்கு நீர் தர இயலாது. தமிழகத்திற்கு நீர் தர வேண்டும் என்று காவிரி மேலாண்மை வாரியமும் எங்களுக்கு உத்தரவிடவில்லை. ஏனென்றால் கர்நாடகாவில் நீர் இல்லை என்பது அவர்களுக்கே தெரியும்.

நீர் திறக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் இருந்து கோரிக்கை வந்ததாக எனக்கு தெரியவில்லை. ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் தமிழகத்துக்கு இவ்வளவு நீர் கர்நாடகம் தர வேண்டும் என்று சொல்லப்பட்டாலும், எங்களிடம் தருவதற்கு போதிய நீர் இல்லை. எப்போது தமிழகத்துக்கு நீர் திறக்கப்படும் என்று கேட்டால், அது மழை பெய்வதை வைத்து சொல்ல முடியும். இப்போது வரை நல்ல மழை பெய்யவில்லை’ என்றார்.

தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடப்படாது என கர்நாடக அமைச்சர் திட்டவட்டமாக அறிவித்திருப்பதால் தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்துக்கு நீர் தர வேண்டும் என்று காவிரி ஆணையமும் உத்தரவிடவில்லை; நீர் திறக்க வேண்டும் என்று தமிழக அரசிடமும் இருந்தும் கோரிக்கை வரவில்லை என்று கர்நாடக அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் இதுபற்றி தமிழக முதல்வர் விஜய் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனால் தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத்தருவதில் அவர் அலட்சியமாக இருக்கிறார் என தமிழக கட்சித் தலைவர்களும் விவசாயிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதுபற்றி கூறுகையில், ‘‘கர்நாடக அமைச்சரின் பேச்சுக்கு தமிழக முதல்வர் விஜய் என்ன பதில் வைத்திருக்கிறார். ஜூலை மாதம் தர வேண்டிய 32 டிஎம்சி தண்ணீரையும் கர்நாடகம் தர மறுக்கிறது. ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதல்வர் கேட்டுப்பெற வேண்டும்’’ என தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கையில், ‘‘மேலாண்மை ஆணையம் உத்தரவிடவில்லை,

தண்ணீர் தரமுடியாது என்று கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி சொல்வது வடிகட்டிய பொய். தமிழக மக்களின் வாழ்வோடு கர்நாடக காங்கிரஸ் ஆட்சியாளர்கள் விளையாடுவதை, தவெக அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கக்கூடாது. கர்நாடகம் தமிழகத்திற்கு தரவேண்டிய பங்கு நீரை பெறுவதற்கு தவெக அரசின் முதல்வர் கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும்’’ என கூறியுள்ளார். ‘‘ராகுல் காந்தியிடம் அழுத்தம் கொடுத்து காவிரி தண்ணீரை பெற்றுத்தர தமிழக காங்கிரஸ் முன்வர வேண்டும்’’ என கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி பொதுச்செயலர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறுகையில், ‘‘கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலாது என்று மறுப்பது, உச்ச நீதிமன்ற உத்தரவை நேரடியாக அவமதிக்கும் செயல். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து, காவிரி மேலாண்மை வாரியம், குறிப்பிட்டுள்ள கால அட்டவணையைப் பின்பற்றி, தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எம்.வீரபாண்டியன், ‘‘கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும். கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும். இது வெறும் நதிநீர் பிரச்னை அல்ல, இரு மாநில மக்களின் ஒற்றுமை மற்றும் நல்லுறவை சார்ந்த பிரச்சினை என்பதால் பொறுப்புணர்வுடன் கர்நாடக அரசு செயல்பட வேண்டும்’’ என கூறியுள்ளார்.  இதுபோல் பல்வேறு கட்சி தலைவர்களும் விவசாய சங்க தலைவர்களும் கர்நாடகாவின் செயலுக்கும் தமிழக முதல்வர் விஜய் அதற்கு எதிர்வினையாற்றாமல் இருப்பதற்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

* கர்நாடகா தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீரை ஜூன் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் மாதம்தோறும் பிரித்து வழங்க வேண்டும்.

* கர்நாடகாவில் போதிய மழை இல்லாததால் அணைகள் நிரம்பவில்லை. எனவே தமிழகத்துக்கு இப்போதைக்கு நீர் தர இயலாது என கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி அறிவித்துள்ளார்.

* இதனால் தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: