தெஹ்ரான்: ஈரானின் முக்கிய துறைமுக நகரங்கள் மீது அமெரிக்க ராணுவம் நள்ளிரவில் சரமாரி தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா நிதியுதவி செய்துவந்த சாபஹார் துறைமுகப் பகுதிகள், பந்தர் அப்பாஸ், சிரிக் நகரங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சி தாக்குதல் நடத்தியது. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி 22 நாட்களே ஆன நிலையில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.
இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சாபஹார் துறைமுகப் பகுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. சாபஹாரில் உள்ள IRGC கடற்படையின் இமாம் அலி தளம் மற்றும் கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியது. சாபஹார், கொனாரக் பகுதிகளில் சுமார் 10 பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், இதனால் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல்
குவைத், பஹ்ரைன், கத்தார் நாடுகள் மீது ஈரான் ராணுவம் மீண்டும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. வான்வழித் தாக்குதல் அபாய சைரன்களை ஒலிக்கச் செய்து, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அந்நாட்டு அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. ஈரான் ஒரு முறை தாக்கினால், பதிலுக்கு 20 மடங்கு மிகக் கடுமையான தாக்குதலை நடத்துவோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களை தாக்கி, ஈரான் தற்போது கட்டுப்பாடில்லாமல் செயல்பட்டு வருவதாகவும் ட்ரம்ப் குற்றச்சாட்டியுள்ளார். இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் தாக்கி வருவதால் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.
ஈரான் எச்சரிக்கை
அமெரிக்கா ஈரானைத் தாக்கினால், நிச்சயமாகத் திருப்பித் தாக்குவோம், அமெரிக்கா வீணாகப் போராடி மேலும் சிக்கலில் மூழ்க வேண்டாம் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் நீரிணை அமெரிக்காவின் மிரட்டல்களுக்குப் பணியாது, ஈரானின் முன்னெடுப்பின் கீழ் மட்டுமே திறக்கப்படும் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
