ஈரோடு, ஜூலை 9: ஈரோடு மாநகராட்சி 36வது வார்டு மணிக்கூண்டு பகுதியில் ஏராளமான மொத்தம், சில்லறை ஜவுளி விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. மாநகரில் எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் ஒன்றாக உள்ளது. சமீபத்தில், இங்கு பிரதான ரோட்டில் நிலத்தடியில் உள்ள குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை சீரமைக்கும் பணிக்காகக் குழி தோண்டப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பின், அந்தப் பள்ளங்களில் தார் கலவை ஊற்றி மூடப்பட்டது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே ஏற்பட்ட மண் தளர்வு காரணமாக தார் கலவை உள்வாங்கி, ரோட்டோரம் ஒரு அடிக்கும் மேலாக குழி ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.இதுகுறித்து அப்பகுதி கடைக்காரர்கள் கூறியதாவது: ரோட்டில் குழி ஏற்பட்ட இடத்தில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை செல்கிறது. அவ்வப்போது கழிவுநீர் கசிந்து வந்தது. இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் உருவாகியுள்ளது. எனவே, பெரிய விபத்துகள் ஏற்படும் முன்பு, அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்.
