ஈரோடு,ஜூலை8: ஈரோட்டில் ஒரே நாளில் தக்காளி விலை திடீரென வீழ்ச்சி அடைந்தது. கிலோ ரூ.7 முதல் ரூ.10 வரை விற்கப்பட்டதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஈரோடு தினசரி மார்க்கெட்டிற்கு தற்போது ஆந்திராவில் இருந்து மட்டுமே தக்காளி வந்தது. போதிய விளைச்சல் இல்லாததால் 2 அல்லது 3 டன் அளவுக்கு மட்டுமே தக்காளி வரத்தானது. இதனால் விலை கணிசமாக அதிகரித்து கிலோ ரூ.30க்கு விற்கபட்டது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் திடீரென தக்காளி விலை வீழ்ச்சி அடைந்தது. ஆந்திராவில் இருந்து 5 டன் தக்காளி வரத்தானது. இதனால் கிலோ ரூ.7 முதல் ரூ.10 வரை விற்க பட்டது. திடீர் விலை வீழ்ச்சி மக்களை ஆச்சர்யபட செய்துள்ளது. பலரும் விரும்பி அதிகளவில் தக்காளியை வாங்கி சென்றனர்.
இதுகுறித்து ஈரோடு வ.உ.சி பூங்கா காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் கூறியதாவது: கடந்த மே, ஜூன் மாதங்களில் தக்காளி விலை கிலோ ரூ.25 முதல் ரூ.55 வரை விற்பனையானது. ஆனால், உள்ளூர் உற்பத்தி மற்றும் பிற பகுதி வரத்துகளால் விலை சரிந்துள்ளது. சந்தையில் 25 கிலோ எடை கொண்ட ஒரு தக்காளி பெட்டி தற்போது அதிகபட்சமாக ரூ.250 வரை விற்பனையாகிறது. இதனால், மொத்த விலையில் கிலோவுக்கு ரூ.10 வரை குறைந்துள்ளது. சில்லறை சந்தைகளில் கிலோவுக்கு ரூ.16 வரை விலை குறைந்து, தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.10க்கு விற்பனையாகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். தக்காளி விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் போட்டி போட்டு வாங்கிச்செல்கின்றனர்.
