ஈரோடு, ஜூலை 3: ஈரோடு மாவட்டத்தில் மதுபான பார்களுக்கான டெண்டர் புதுப்பிக்கப்படாததால் 94 பார்கள் மூடப்பட்டன. தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றது. கடந்த நிதியாண்டில் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.48 ஆயிரத்து 344 கோடி வருவாய் கிடைத்துள்ளது. குறிப்பாக, இந்த டாஸ்மாக் கடைகள், பார் வசதியுடன் செயல்பட்டு வருகின்றன. இந்த பார்களை நடத்த தனிநபர்கள் 2023ம் ஆண்டுக்கான பார் உரிமைகளுக்கான டெண்டர் எடுக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இதனையடுத்து மீண்டும் டெண்டர் விடாமல் ஒப்பந்தத்தை மேலும் 6 மாதம் நீடிக்கப்பட்டது. நீடிக்கப்பட்ட காலமும் கடந்த ஜூன் 30ம் தேதி முடிவடைந்தது. அதனைத்தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளை ஒட்டி உள்ள மதுபான பார்கள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் 94 பார்கள் நேற்று மூடப்பட்டன. இதனால், மதுப்பிரியர்கள் சாலையோரங்களில் நின்று மது அருந்தி செல்கின்றனர்.
