சென்னை: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி கடந்த 5 நாட்களாக, தேர்தல் தோல்வி குறித்தும், நிர்வாகிகள் வேறு கட்சிக்கு செல்வது குறித்தும் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார். ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடன் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தை ஆற்காடு எம்எல்ஏ சுகுமார் மற்றும் ஜோலார்பேட்டை எம்எல்ஏ கே.சி.வீரமணி புறக்கணித்தனர்.
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘‘அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம். கவர்ச்சியை நம்பி மக்கள் வாக்களித்து விட்டனர். உள்ளாட்சி தேர்தலில் கட்சியில் விசுவாசம் உள்ளவர்களை மட்டுமே பரிந்துரையுங்கள். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சியை பிடித்து விடலாம். தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்காது’’ என்றார்.
* ‘அரசு வக்கீல்களை நியமிக்கிற வேலையை முதல்ல பாருங்க..’
திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசியல் ரீதியான அரசு வழக்கறிஞர்கள் அனைவரும், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனேயே விலகிவிட்டார்கள் என்று தெரிகிறது. அந்த இடங்களுக்கு அரசு வழக்கறிஞர்களை நியமிக்க பல லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தவெக கட்சியை சார்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவரே நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் இல்லாததால் விசாரணைபாதிக்கப்படுகின்றன.
அனுபவமிக்க சட்டத் துறையினரை அணுகி, தமிழகம் முழுவதும் முறையாக திறமையான அரசு வழக்கறிஞர்களை உடனடியாக நியமித்து, நீதி பரிபாலனத்தை சீரமைக்க வேண்டும். சிறு குழந்தைகள் கடல் மணலில் கோபுரம் கட்டி விளையாடுவதுபோல் இந்த ஆட்சியாளர்கள், அரசை கையில் வைத்துக்கொண்டு விளையாட்டு காட்டி வருவது ஏற்கத்தக்கதல்ல என்று எடப்பாடி அறிக்கையில் கூறியுள்ளார்.
