தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்: குருவி கைது

சென்னை: தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ரூ.3 கோடி மதிப்புடைய ஹட்ரோபோனிக் கஞ்சா கடத்திய குருவி கைது செய்யப்பட்டர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், நள்ளிரவில் தாய்லாந்தில் இருந்து, சென்னை வந்த விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 38 வயது ஆண் பயணி ஒருவர் சுற்றுலா பயணியாக, தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்தார். அவர் மீது ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த பயணியை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.  அந்த பயணியை, சென்னை விமான நிலைய சுங்க அலுவலகத்திற்கு அழைத்து சென்று உடைமைகளை முழுமையாக பரிசோதித்தனர்.

அப்போது சூட்கேசுக்குள் மறைத்து வைத்திருந்த 5 பார்சல்களை பிரித்து பார்த்தபோது 3 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா சிக்கியது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.3 கோடி. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் போதை பொருள் கடத்தல் பயணியை கைது செய்து ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் கடத்தல் குருவி என்பது தெரியவந்த நிலையில், போதைப் பொருள் கடத்தல் கும்பல் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: