ராமேஸ்வரம்: பாம்பன் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 120 புறாக்களை கியூ பிரிவு போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து கடல் வழியாக இலங்ைகக்கு பீடி இலைகள், மருந்து மாத்திரைகள், அழகு சாதனப் பொருட்கள், போதைப் பொருட்கள் உள்ளிட்டவைகள் கடத்தி செல்லப்படுகின்றன. இவற்றை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு புறாக்கள் கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று நள்ளிரவு முதல் பாம்பன் கடற்கரையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் கடற்கரைக்கு வந்த காரை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அதில் 10 கூண்டுகளில் 120 புறாக்கள் இருந்தது தெரிய வந்தது.
காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்த குமரேசன் (39), சோழவந்தானைச் சேர்ந்த நவாப் ஷெரீப் (22) என்பதும், படகு மூலம் புறாக்களை இலங்கைக்கு கடத்த கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து காருடன் புறாக்களை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர். இவர்களை பாம்பன் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
