சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகளுக்காக அரசு மானிய விலையில் விற்பனைக்கு அனுப்பும் யூரியா உர மூட்டைகளை பெரும் எண்ணிக்கையில் வாங்கி, இதை உருக்கி திரவ வடிவில், அதாவது, ட்ரூபாண்ட் பசையாக மாற்றி மரப்பலகைகளை ஓட்டும் தேவைக்காக இந்த தொழிற்சாலைகள் பல ஆண்டுகளாக இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே திருமலையாம் பாளையம் தமனாம்பாறை கிராமத்தில் தென்னந்தோப்புகள் இடையே இதற்கான தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் 40 டன் சுமை ஏற்றும் பெரிய டேங்கர் லாரிகள் இந்த தொழிற்சாலைக்கு பொது சாலைகளில் சென்று வந்துள்ளன. இதனால் சாலைகள் சேதம் அடைந்த நிலையில் பொதுமக்கள் சாலை பாதுகாப்புக்காக எதிர்த்து போராடியுள்ளனர். இதற்காக விவசாயிகளும், பொதுமக்களும் இந்த லாரிகளை மடக்கி பிடித்த பொழுது இந்த உண்மை தெரியவந்துள்ளது.
வட மாநில தொழிலாளர்களை மட்டுமே வைத்து இந்த பணிகள் நடந்து வந்துள்ளதால், வெளியில் தெரிய வாய்ப்பில்லாமல் இருந்திருக்கிறது. இந்நிலையில் மதுக்கரை அருகே பிச்சனூரிலும் இது போன்ற ஒரு தொழிற்சாலை செயல்பட்டு வருவதை விவசாயிகள் கண்டறிந்துள்ளனர். திரவ யூரியாவை ஏற்றுவதற்கு இருந்த டேங்கரையும், பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான யூரியா மூட்டைகளையும் கண்டுபிடித்துள்ளனர். வேளாண் துறையில் இதன் கண்காணிப்பிற்கும், நடவடிக்கைக்கும் உரிய தனி அலுவலர்கள் உண்டு.
இவர்கள் அறியாமல் ஆயிரக்கணக்கான மானிய உர மூட்டைகளை எப்படி இந்த ஆலை முதலாளிகளால் பெற முடிந்தது. தொழிற்சாலை சட்டப்படி அனுமதிகூட பெறாமல்அல்லது போலி அனுமதி பெற்று எப்படி செயல்பட்டது. கம்பெனி சட்டப்படி கூட கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் எங்கே போனார்கள். விவசாயிகளுக்காகவே தனி உர மானிய நிதி வழங்கி வருவதை கள்ளத்தனமாக கொள்ளையடிக்கும் மோசடி கும்பலை கண்காணிக்க தவறிய வேளாண் துறை அலுவலர்கள்மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இந்த ஆலைகளை கள்ளத்தனமாக நடத்தியவர்கள் மீதும், யூரியா உரங்களை சப்ளை செய்தவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுத்து சிறைப்படுத்தி தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். மேலும் இப்படியான தொழில்களை கண்டறிய தமிழ்நாடு முழுதும் தொடர் ஆய்வுக்குள்ளாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
