பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி கோரி சென்னை தலைமை செயலகம் முன் விவசாயிகள் நிர்வாண போராட்டம்

*அய்யாக்கண்ணு அறிவிப்பு

வேதாரண்யம் : பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி கோரி விரைவில் சென்னை தலைமை செயலகம் முன் நிர்வாண போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.சென்னையில் கடந்த 4ம்தேதி நடந்த தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் பிரிஞ்சிமுளையை சேர்ந்த விவசாயி சோமு (எ) சோமசுந்தரம்(67) கடந்த 5ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு சொந்த ஊர் திரும்பினார். இதில் ஏற்கனவே மனஉளைச்சலில் இருந்த சோமசுந்தரம் வீட்டுக்குள் நுழைந்த சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் பெற்ற பயிர்கடனை திரும்ப செலுத்த இயலாத நிலையை எண்ணி வருந்தி மனவேதனை காரணமாக விவசாயி சோமசுந்தரம் உயிரிழந்த சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முழு கடன் தள்ளுபடி மறுப்பால் மனஉளைச்சலில் விவசாயி சோமசுந்தரம் உயிரிழப்புக்கு காரணம் என காவிரி கடைமடை விவசாயிகள் சங்கம், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் ஆகியவை கடும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் சோமசுந்தரம் உடல் தகனம் செய்யப்பட்ட சுடுகாட்டுக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் தனபால் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை சோமசுந்தரம் வீட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு இடுகாடு சென்றனர். பின்னர் அவரது உடல் எரியூட்டப்பட்ட இடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். சுடுகாட்டிலேயே அமர்ந்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். உயிரிழந்த சோமசுந்தரம் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் விரைவில் சென்னை தலைமை செயலகம் முன் 111 விவசாயிகள் ஆடையின்றி நிர்வாண போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Related Stories: