*நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
சேத்துப்பட்டு : சேத்துப்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் வீட்டு கட்டுமான பணிகளுக்காக செங்கல், ஜல்லி, எம்சாண்ட், மணல், முரம்பு மண் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் டிராக்டர்கள், லாரிகள், மினி லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம்பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் தினமும் ஏராளமான இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த வாகனங்களில் பலரும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காமல், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றி செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் பாரத்தை மூடாமல் கொண்டு செல்வதால் ஜல்லி, கற்கள், மணல் மற்றும் செங்கற்கள் சாலையில் சிதறி விழுகின்றன.
இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். சாலையில் சிதறிக் கிடக்கும் ஜல்லி மற்றும் கற்களில் சறுக்கி விழும் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. அதேபோல் நான்கு சக்கர வாகனங்களின் டயர்கள் பஞ்சராகும் சம்பவங்களும் அதிகரித்து வருவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், முன்னால் செல்லும் வாகனங்களில் இருந்து பறந்து வரும் ஜல்லி மற்றும் கற்கள் பின்னால் வரும் வாகனங்கள் மீது விழுவதால் கண்ணாடிகள் சேதமடைவதுடன், இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் காயமடையும் அபாயமும் நிலவுகிறது. இதேபோல் சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டிக்கு நெல் மூட்டைகளை ஏற்றி வரும் சில டிராக்டர்களில், மூட்டைகளின் மீது விவசாயிகள் படுத்துக்கொண்டு பயணம் செய்வதும் வழக்கமாக உள்ளது.
இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய செயல் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இந்த விதிமீறல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
சேத்துப்பட்டு பகுதிகளில் வாகன தணிக்கையை மேற்கொள்ள வேண்டிய ஆரணி ஆர்டிஓ அதிகாரிகள் அரிதாகவே ஆய்வு மேற்கொள்வதாகவும், கடந்த ஆண்டு ஒருமுறை மட்டுமே ஆய்வு நடத்தப்பட்டதாகவும் பொதுமக்கள் கூறியதாக தெரிகிறது.
எனவே, அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது தீவிர சோதனை நடத்தி, விதிமீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்துத் துறையும், போலீசாரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
