புழல், ஜூன் 29: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், சோழவரம் சுற்றுவட்டார இடங்களில் நள்ளிரவு பரவலாக மிதமான மழை பெய்தது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் செங்குன்றம் 5 செமீ, சோழவரம் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருவதால் கடந்த சில நாட்களாக 235 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கும் நிலையில், மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து 335 கன அடியாக அதிகரித்துள்ளது.
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 1676 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 12.77 அடி உயரத்தில் நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக புழல் ஏரியில் இருந்து 179 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 87 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியில் 1.31 அடி உயரத்தில் நீர் இருப்பு உள்ளது. மழை காரணமாக சோழவரம் ஏரிக்கு மீண்டும் 45 கன அடி நீர்வரத்து வர தொடங்கியது.
