மதுரை: மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய ஆளுநருக்கு உரிமையில்லை. அதிகாரிகள் ஒத்துழைப்பும் வழங்கக்கூடாது என அமைச்சர் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேற்று முன்தினம் மதுரை வந்தார்.
அப்போது கலெக்டர் நிசாந்த் கிருஷ்ணா, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோருடன் ஒன்றிய, மாநில அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆளுநர் ஒரு மணி நேரம் ஆய்வு நடத்தினார். அதில், நிர்வாக நடைமுறைகள், மக்கள் குறைதீர்ப்பு பணிகள், மின்னணு பயன்பாடு, நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தொற்று தடுப்பு பணிகள், கல்வித்துறை சட்டம், ஒழுங்கு தொடர்பான ஆளுநரின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு இருவரும் விளக்கம் அளித்தனர். மேலும், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநர், வைகையாற்றை சீரமைக்காவிட்டால், ஆளுநர் மாளிகையேகளமிறங்கும் என கூறியிருந்தார்.
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக உள்ள அர்லேகர், அரசுத்துறை உயரதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஆளுநரின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. இதில், அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன், தேனி எம்பி தங்கதமிழ்செல்வன், மதுரை எம்பி சு.வெங்கடேசன் மற்றும் எம்எல்ஏக்கள், கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மாநகராட்சி கமிஷனர் கவ்ரவ்குமார், உள்ளிட்ட அனைத்து துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு தலைமை வகித்து எம்பி சு.வெங்கடேசன் பேசியதாவது: ஒன்றிய அரசின் திட்டங்களை ஆய்வு செய்வதற்கான சட்ட உரிமை, எங்களுக்கு மட்டும் தான் உள்ளது. அரசியல் சாசனப்படி 39 அமைச்சகங்களின் கீழ் செயல்படும் 96 துறைகளை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு மட்டுமே ஆய்வு செய்யும். சட்டப்படி குழுவின் தலைவர் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும். எங்களை தவிர்த்து ஒரு குறிப்பிட்ட ஒன்றிய அமைச்சர் அவரது துறையில் ஆய்வு செய்யலாம். ஆனால், பல துறைகளில் ஆய்வு செய்வதற்கு, அரசியல் சாசனம் எங்களுக்கு மட்டுமே உரிமை வழங்கி உள்ளது. எங்கள் உரிமையை வேறு யார் எடுக்க நினைத்தாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஒரு வேளை யாராவது ஆய்வு நடத்த அதிகாரிகளை அழைத்தால், எந்த அதிகாரிகளும் பங்கேற்க கூடாது. அதை மீறி பங்கேற்கும் அதிகாரிகள் மீது சம்மன் அனுப்பப்பட்டு விளக்கம் கேட்கப்படும். இவ்வாறு கூறினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது: ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதில் ஒவ்வொரு துறைகளிலும் உள்ள பிரச்னைகள் மற்றும் இடையூறுகளை சரிசெய்து, வளர்ச்சி திட்டங்களை முடிப்பதில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், அரசும் சட்டத்திற்குட்பட்டு எந்த திட்டங்களையும் ஆய்வு செய்யலாம். ஆளுநர் எந்த திட்டங்களையும் ஆய்வு செய்ய உரிமை இல்லை. அதை எங்கள் அரசும் அனுமதிக்காது. எங்கேயாவது ஆளுநர், அரசின் நிர்வாகத்திலோ அல்லது ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டால் அதற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்படும். அதிகாரிகள் அரசின் அனுமதி பெறாமல், அதற்கு ஒத்துழைப்பும் கொடுக்கக் கூடாது. ஆளுநர் ஆய்வு செய்வது என்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சரின் முரண்பட்ட தகவலால் சர்ச்சை மதுரை செய்தி மக்கள் தெடர்பு அலுவலகம் சார்பில் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மதுரை வருகைதந்தார். மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை அரசு விருந்தினர் மாளிகைக்கு ஆளுநர் வந்தார். அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்’’ என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனால், அமைச்சர் நிர்மல்குமார் மதுரையில் நேற்று நிருபர்களிடம் பேசும்போது, ‘‘தமிழ்நாடு ஆளுநர் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் ஆய்வு கூட்டம்’’ நடத்தினார் என்று கூறினார். அதே நேரம் அரசு செய்திக்குறிப்பில் ‘மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. ஒரு அமைச்சரே ஆய்வு செய்தார் என்று கூறும்போது, அரசு தரப்பில் ஏன் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூற வேண்டும் என்று பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அமைச்சர் நிர்மல்குமாரின் முரண்பட்ட தகவல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
‘ஆளுநர் மண்வெட்டி எடுத்து வைகையை தூர்வாருவாரா?’
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு பின் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிலும், அரசு இயந்திரங்களின் செயல்பாடுகளிலும் ஆளுநர் தலையிட அதிகாரம் கிடையாது. ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட அவரின் அதிகாரம் ராஜ்பவனில் மட்டும் தான். மற்றபடி எங்கும் தலையிடுவதற்கான அதிகாரம் இல்லை. ராஜ்பவனில் ஆளுநர் மட்டும் தான் இருப்பார். அவருக்கு மூணு பிஏ, ஒரு செக்ரட்டரி தான் இருப்பார்கள். ஆளுநர் மாளிகையில் என்ன வேலை இருக்கிறதோ அதை செய்தால் மட்டும் போதும். வைகையை தூர்வருவதற்கு, ஒன்றிய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு 2 வாரங்கள் ஆகியும் இதுவரைக்கும் அனுமதி வரவில்லை. அனுமதி வந்தவுடன் பணியை தொடங்குவோம்.
ஆளுநர் சுற்றுச்சூழல் அனுமதி வாங்குவாரா? மண்வெட்டியை கையில் எடுத்து தூர்வாருவாரா? நீர்வளத்துறை அதிகாரியிடம் அனுமதி பெற்று உத்தரவு வாங்குவாரா? வைகையில் தூர் வாருவதற்கு எப்படி போவார்? லாரிகளை எடுத்து போய் தூர்வாருவாரா? ஆளுநர் மாளிகை எதை செய்யுமோ அதை மட்டும் செய்தால் போதும். தேவையில்லாமல் குழப்பம் விளைவிக்கும் எந்த வேலையும் ஆளுநர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எந்த அழுத்தத்திற்கும் இந்த அரசு அடிபணியாது. ஆளுநர் உள்ளிட்ட யாருக்கும் அடிபணியாது. யாருக்கும் வளைந்து கொடுத்து இங்கு ஆட்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறுகூறினார்.
