சேலம்: கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீதான சிபிஐ பிடி இறுகுவதால் அவர் கதற தொடங்கியுள்ள நிலையில், 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கி சமாதானப்படுத்த முதல்வர் முயற்சி மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலையொட்டி கரூரில் பிரசாரத்திற்கு சென்றார். இரவு 7 மணியில் இருந்து 10 மணி வரை பொதுக்கூட்டம் நடத்துவதாக போலீசாரிடம் அனுமதி வாங்கிவிட்டு, காலை 12 மணிக்கு விஜய் வருகிறார் என தவெக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை நம்பி ஏராளமான ரசிகர்கள் விஜய்யை பார்ப்பதற்காக காத்திருந்தனர். அவர்களுக்கு அங்கு குடிதண்ணீர் வசதி கூட செய்து கொடுக்கவில்லை. காலை 11 மணியில் இருந்து இரவு 7 மணி வரை இருந்த ரசிகர்களால் பசி தாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இரவு 7.15 மணியளவில் நடிகர் விஜய் அங்கு வந்தார். கட்டுக்கடங்காத கூட்டம் இருந்த நிலையில், நடிகர் விஜய்யை நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வராமல் சற்றுதூரத்திலேயே இருந்து பேசுமாறு போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
ஆனால் குறிப்பிட்ட இடத்தில் தான் எனது வாகனம் நிற்கும் என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது விஜய் பேச ஆரம்பிக்கும் போது கூட்ட நெரிசலில் ரசிகர்கள் சிக்கிக்கொண்டனர். போலீஸ் அதிகாரிகளின் பேச்சை மீறி உள்ளே வந்த நிலையில் ஏற்கனவே பசியால் வாடிக்கொண்டிருந்த ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கினர். இதில் 41 பேர் உடல் நசுங்கி பலியாகினர். ஆனால் நடிகர் விஜய், அங்கிருந்து உடனடியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.
இந்த துயர சம்பவத்தை கேள்விப்பட்ட அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து கரூருக்கு வந்து ஆறுதல் தெரிவித்தார். இதுதொடர்பாக தற்போது அமைச்சர்களாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் இணைப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ‘‘கரூரில் எங்களுக்கு ஒரு கணக்கு பாக்கி இருக்கிறது. அதை முடிக்காமல் ஓய மாட்டோம். எங்கள் மக்களை காவல்துறை மூலம் கொன்று குவித்ததற்கு பதிலடி கொடுப்போம்’’ என்றார். இந்த பேச்சுமூலம் சம்பவத்தை திசை திருப்ப அவர் முயற்சி செய்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரூர் கூட்டத்தை ஏற்பாடு செய்த மாவட்ட செயலாளர், ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜய் ஆகியோர் மீது சிபிஐ பிடி இறுகி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஆதவ் அர்ஜூனா கதறி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
கரூரில் போலீஸ் அதிகாரிகள் தடுத்தும் அதை கேட்காத காரணத்தினால் தான் இந்த துயர சம்பவம் நடந்திருப்பதும் சிபிஐ விசாரணையில் தெளிவாக தெரியவந்துள்ளது. தங்கள் மீது நெகட்டிவான ரிப்போர்ட் சிபிஐயிடம் இருப்பதால் அதனை திசை திருப்பும் வகையில் ஆதவ் அர்ஜூனா பேச்சு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. சிபிஐ விசாரணை வேகமெடுக்கும் நிலையில் 41 பேரின் குடும்பத்தினரும் தன் மீது கோபப்பட்டு விட கூடாது என்பதற்காக அரசு சார்பில் வேலை வழங்குவதற்கு முதல்வர் விஜய் நடவடிக்கை எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. தங்கள் மீதான குற்றத்தை மடைமாற்றம் செய்வதற்கான திட்டமாக ஆதவ் அர்ஜூனா பேச்சு கருதப்படுகிறது.
இதுபற்றி அதிமுகவினர் கூறுகையில், ‘‘41 பேர் பலியான சம்பவத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறினார். தற்போது அவர் தவெகவில் இணைந்து இருக்கிறார். நடந்த சம்பவம் யாரால் எப்படி நடந்தது என விஜயபாஸ்கருக்கும் தெரியும். ஆனால் அவரை தவெகவில் சேர்த்து தங்களுக்கு ஆதரவாக பேசுவார் என ஆதவ் அர்ஜூனா கூறி வருகிறார். போலீசாரின் அறிவுரையை கேட்காமல் இந்த கூட்டத்தை நடத்திய காரணத்தால் தான் இந்த கொடிய சம்பவம் நடந்தது. மக்களை ஏமாற்றுவதற்காகவே ஆதவ் அர்ஜூனா பேசி வருகிறார்,’’ என்றனர்.
