×

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் திடீர் விலகல்

 

சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விலகினார். பதவி விலகல் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய கடிதத்தில்; அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். ஒரு தலைவர் தானே அழிந்தால் கூட தனது கொள்கைகளும், இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள்.

ஆனால், இயக்கமும், கழகத் தொண்டர்களும் அழிந்தால் கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவராக இருப்பதில்லை. சரியான நேரத்தில் தவறான முடிவெடுப்பதன் காரணமாகவும், தனது வெற்றிப் பாதையில் இருந்து அதிமுக விலகிச் சென்று விட்டது. மேலும், தேர்தல் களத்தில் நான் தனித்து விடப்பட்ட நிலையிலும் கூட, கழகத்திற்காக தேர்தல் பரப்புரையாற்றினேன். ஆனால், மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு என்பதை நான் உணாந்து கொண்டேன்.

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின்
அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று

மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர் வாழ்வதைவிட, அவ்வாறு செய்யாததால் கெட்டான் என்று சொல்லப்படுதல் நன்று என்கிற வள்ளுவப் பேராசானின் வார்த்தைகளுக்கு நான் கீழ் படிகிறேன். மாணவப் பருவம் தொட்டு ரத்தமும், சதையுமாக இருந்து இந்த இயக்கத்தோடு பணியாற்றி தற்போது விலக வேண்டிய சூழ்நிலையை எண்ணிப் பார்க்கையில், என் மனதில் ஏற்படும் கடுமையான வலியை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை. நேரம் வருகிற போது இன்னும் இதுகுறித்து பேசுகிறேன். ‘புதிய இடத்தில் நடுவதற்கு புடுங்கிப் போன செடியில் இருக்கும் பழைய மண்ணைப் போல’ இந்த இயக்கத்திற்காக ஆற்றிய என் பழைய நினைவுகளை என்ன செய்வது என்று எனக்கே தெரியவில்லை.. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags : Former Minister ,Vaigai Selvan ,AIADMK ,Chennai ,General Secretary ,Edappadi Palaniswami ,
× RELATED எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய...