×

செங்கல்பட்டு, வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் தோல்வி, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை: சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் படுதோல்வி குறித்து இன்றும் நாளையும் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இன்று செங்கல்பட்டு, வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார். அதிமுகவில் இருந்து பலரும் விலகி தவெகவில் இணைந்து வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு கடும் சவாலை தந்துள்ளது. ஏனெனில் இந்த தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்றது. 108 இடங்களில் வென்ற தவெக, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆட்சி மாற்றம் அதிமுகவை மோசமாக பாதித்துள்ளது.

முதல்முறையாக அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. ஒரு கோடி பேருக்கு மேல் அதிமுகவிற்கு வாக்களித்தனர். 47 இடங்களில் வென்றது. இது மோசமான தோல்வி இல்லை என்றாலும், 2019 முதல் தொடர் தோல்வியை அதிமுக சந்தித்து வருகிறது. இதனால் முன்னணி நிர்வாகிகள் எதிர்காலம் பாதிக்குமோ என்று கருதி சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இனி அதிமுகவில் இருந்தால் தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்பதாலும், பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வழக்குகளில் இருந்து தப்பிக்க அதிமுகவில் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து வருகிறார்கள். இதுவரை 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். அதேபோல் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பல நிர்வாகிகள் அதிமுகவில் இருந்த விலகி தவெகவில் இணைந்து வருகிறார்கள்.

இந்த சூழலில் நேற்று முன்தினம் அதிமுக வளர்ச்சி பணிகளில் மகளிரணியின் பங்கு குறித்த ஆலோசனை கூட்டம், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “அதிமுக ஜனநாயகத்துடன் இயங்கும் ஒரு இயக்கம். பல்வேறு சாதி, மதங்களை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்காக உழைக்கிறோம். அரை நூற்றாண்டு காலம் மக்களுக்காகவே உழைத்துக் கொண்டிருக்கும். அதிமுகவை அழிக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது. மக்கள் அதிமுகவுக்குத்தான் வாக்களித்து எம்எல்ஏ ஆக்கியிருக்கிறார்கள். ஆனால், இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவுடன் இணைந்து வருகிறார்கள்.

இந்த ஆட்சியை நடத்த முதல்வர் விஜய்க்கு என்ன அருகதை உள்ளது? தேர்தலில் வெற்றி – தோல்வி சகஜம். கடந்த மக்களவை தேர்தலைவிட சட்டப்பேரவை தேர்தலில் நமது வாக்கு சதவீதம் கூடியிருக்கிறது. மக்களுக்கு எதுவுமே செய்யாமல் விஜய் ஆட்சிக்கு வந்துள்ளார். ஆட்சிக்கு வந்தும் மக்களுக்கு எதுவுமே செய்யாமல், அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சி நடத்தி வருகிறார். அதிமுகவை விட்டு துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியோடும் எழுச்சியுடன் இருக்கின்றனர். அதிமுகவை வலுப்படுத்த அனைவரும் உழைக்க வேண்டும்” என்று கூறினார்.

இந்த சூழ்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் படுதோல்வி மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து இன்றும் நாளையும் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். இன்று காலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடனும், மாலையில் வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகளின் விலகல் மற்றும் கட்சியில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.

மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளனர். நாளை திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிக்க உள்ளார். இதுவரை காஞ்சிபுரம், நாகை, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கோவை, கரூர், விழுப்புரம், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அதிமுக கட்சியின் முன்னணி நிர்வாகிகள், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்து வரும் நிலையில், இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags : Edappadi Palaniswami ,Chengalpattu ,Vellore ,Chennai ,AIADMK ,General ,Thaveka… ,
× RELATED எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய...