×

குற்றவாளிகள் பயமின்றி துணிச்சலாக சுற்றுகின்றனர்; சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கை சீர்படுத்துங்கள்: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

சென்னை: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கை சீர்படுத்துங்கள் என்று முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த காளிமுத்து என்பவரையும் அவரது 5 வயது மகனையும் சிலர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்து, காளிமுத்துவின் தலையை தனியே துண்டித்து எடுத்துச் சென்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. கேட்போரின் ஈரக்குலையை நடுங்க வைக்கும் இந்த இரட்டைக் கொலையானது “ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை” என்பதற்கான அவலச் சான்று.

பட்டப்பகலில் பொதுவெளியில் இப்படியொரு பயங்கரம் நடக்குமளவிற்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடப்பதை வேடிக்கை பார்க்கவா மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்? சட்டமன்றத்தில் சைகைகள் காட்டி கேலி செய்வதிலும், ஒட்டுப்போட்ட சட்டையான உங்கள் ஆட்சி கவிழாமல் இருக்க பிறரிடம் ஆதரவு கோருவதிலும் மட்டுமே நீங்கள் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால், குற்றங்கள் எப்படி குறையும்?. முந்தைய ஆட்சியில், குற்றவாளிகள் எப்படி கொழுப்பெடுத்துப் போய் திரிந்தார்களோ, அதே போல தற்போதைய ஆட்சியிலும் குற்றவாளிகள் பயமின்றி துணிச்சலாக சுற்றி வருவது வெட்கக்கேடு. எனவே, இனியாவது குற்றங்களை குறைப்பதிலும் குற்றவாளிகளை துடைத்தெறிவதிலும் சிறப்பு கவனம் செலுத்தி, சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கை நீங்கள் சீர்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Nainar Nagendran ,Chief Minister ,Vijay ,Chennai ,Tamil Nadu ,BJP ,Veeravanallur ,Nellai district ,
× RELATED தானியங்கி பட்டா மாறுதல் – 15 நாட்களில்...