ஈரோடு, ஜூன் 29: நசியனூர் அடுத்த சிந்தன்குட்டை பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. 54.60 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட இக்குளம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.50 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. இந்த குளத்தின் கரையில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால், குப்பை காற்றில் பறந்து குளத்தில் தேங்கி, குளம் குப்பை கிடங்கு போல் காட்சி அளிக்கிறது.
மேலும், சாலையோரத்தில் குப்பை குவிந்து கிடப்பதால், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும் துர்நாற்றத்தில் அவதிப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.
