தா.பழூர், ஜூலை 2: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள முனியங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். நாகராஜன் (64) விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர் அரியமுத்து (71) விவசாயி. உறவினர்களான இவர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு இடையே சொத்து சம்பந்தமான பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று அரியமுத்து தனக்கு சொந்தமான இடத்தில் டிராக்டர் மூலம் ஏர் ஒட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த நாகராஜன் பொது இடத்தில் ஏன் ஏர் ஓட்டுகிறாய் என்று கேட்டதாக தெரிகிறது.
இதனால், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு வந்த அரியமுத்துவின் உறவினர்களான ராமலிங்கம், சக்திவேல், அய்யம்பெருமாள் மற்றும் நாகராஜன் உறவினர்களான அழகுராஜன், சந்திரசேகர் பவித்ரா ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்பு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இது குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
