பெரம்பலூர், ஜூலை 1: ஆலம்பாடி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், ஆலம்பாடி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நேற்று (30ஆம் தேதி) போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் மாயக்கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஊமை நாடகத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக நடத்தி காட்டினர்.
நிகழ்ச்சியில், போதைப்பொருட்களை பயன்படுத்த மாட்டேன், பள்ளி வளாகத்தில் போதைப் பொருட்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன். போதையை ஒழிப்போம், போதை அழிவின் பாதை, புகைத்தல் புற்றுநோயை உருவாக்கும், வேண்டாம் வேண்டாம் போதைப் பொருள் வேண்டாம். ஒழிப்போம் ஒழிப்போம் போதைப் பொருட்களை ஒழிப்போம் என ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அலுவலர்கள் ஒன்றிணைந்து உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். இதில், ஆசிரியர்கள் முத்துக்குமார், விஜயலெட்சுமி, ராமதாசு, பிரகாஷ், பாலகணேஷ், அதியமான், அலுவலகப் பணியாளர் மெகருனிஷா மற்றும் மாணவ மாணவியர் அனைவரும் கலந்து கொண்டனர்.
