செட்டிகுளம் கிராமத்தில் மது விற்ற 2 பேர் கைது: 32 பாட்டில்கள் பறிமுதல்

 

பாடாலூர், ஜூன் 29: செட்டிகுளம் பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் எஸ்பி லலித்குமார் உத்தரவின்படி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, தயாரித்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் மலையடிவாரம் செல்லும் சாலையில் உள்ள பிரியாணி கடை அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக நேற்று பாடாலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் எஸ்ஐ சந்திரசேகர் மற்றும் போலீசார்கள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த முகிலன் (32). என்பவர் அரசு டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி விற்றது தெரியவந்தது. அவரை கைது செய்து, அவரிடமிருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இதேபோல் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்த முத்து (80). என்பவரை எஸ்எஸ்ஐ ஜாபர் அலி கைது செய்து, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 22 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கைதான 2 பேரயும் ஜாமீனில் விடுவித்தனர்.

Related Stories: