சென்னை: சாத்தூர் தொகுதியில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏ ராஜவர்மனுக்கு எதிரான தேர்தல் வழக்கை திமுக வேட்பாளர் சீனிவாசன் திரும்ப பெற்றார். சாத்தூர் தொகுதியில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.ஜி.சுப்பிரமணியன் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தொகுதிக்கு 2019ம் ஆண்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜவர்மன் 456 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ராஜவர்மனின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், ராஜவர்மனின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால், தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதி கோரி சீனிவாசன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிப்பதால் எந்த பலனும் இல்லை எனக் கூறி தேர்தல் வழக்கை திரும்பப் பெற அனுமதித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
