- அமைச்சர்
- புஸ்ஸி ஆனந்த்
- உயர் ஆணையர் தினம்
- மாமல்லபுரத்தில்
- சென்னை
- டவேகா
- Vijayabaskar
- ஆடமுவா
- ஆதிமுகா
- தமிழ்நாடு சட்டமன்றம்
சென்னை: அதிமுகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் 5 முன்னாள் அமைச்சர்கள், 15 முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைகின்றனர். இதற்கான விழா நாளை காலை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இது அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள், தொண்டர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. அதிமுக கட்சி நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து வருவதாக கருதிய அவர்கள் சட்டமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணியாக பிரிந்து செயல்பட்டனர். பின்னர், அவர்களுக்கு தவெகவில் அமைச்சர் பதவி கிடைக்காததால் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து, மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுகவில் இணைந்தாலும், அவர்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமாக செயல்பட மறுத்து வருகிறார்கள். இதில் அதிருப்தி அடைந்த எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்யபாமா, ஜெயக்குமார் ஆகிய 4 பேர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களும் தற்போதைய அதிமுக எம்எல்ஏக்களுமான சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) தொகுதி ஆகிய இரண்டு பேரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்த இரண்டு முன்னாள் அதிமுக அமைச்சர்களுடன் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எஸ்.வளர்மதி உள்ளிட்ட 5 முன்னாள் அமைச்சர்கள், அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் நாளை இணைகிறார்கள். இதற்கான விழா, நாளை காலை 9 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் நடைபெறுகிறது. இவர்கள் அனைவரும் அமைச்சர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தவெக தலைவரும் முதல்வருமான விஜய் தலைமையில் இணைவதற்கே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பல நாட்களாக காத்திருந்தனர். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்றே கூறுப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களுடன் அவர்களது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தவெகவில் இணைய உள்ளனர்.
அதிமுகவை பொறுத்தவரை இதுவரை 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது. தவெகவில் இணையும், விரைவில் இந்த தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் இந்த 6 பேருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் ஆகியோர் அதிமுக தலைமையுடன் தொடர்ந்து மோதல் போக்கை காட்டி வருகிறார்கள். அவர்களும், தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்வார்களா? என்று கேள்வி எழுந்துள்ளது.
இதில் சி.வி.சண்முகம் மட்டும் ஆரம்பத்தில் கட்சி தலைமையை எதிர்த்து வந்த நிலையில், தற்போது அமைதியாக ஒதுங்கி இருக்கிறார். இதுபற்றி அவரது ஆதரவாளர்கள் கூறும்போது மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சி.வி.சண்முகம் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அதிமுககூட்டணியில் இடம் பெற்ற பாமக தயவில்தான் சி.வி.சண்முகம் வெற்றி பெற்றார் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், சி.வி.சண்முகம் அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்து மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட்டால் அவர் வெற்றிபெற முடியாது என்பதாலேயே, சி.வி.சண்முகம் ராஜினாமா செய்யாமல் மவுனம் காத்து வருவதாக கூறப்படுகிறது.
