சென்னை: சென்னை அருகே தவெக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. ஆனால் ஆட்சியில் பங்கேற்ற கட்சிகள் மட்டுமே பங்கேற்கின்றன. இந்தக் கட்சிகளும் செல்வாக்கு இல்லாத கட்சிகள் என்பதால் தவெக அதிர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கூட்டணி ஆட்சி அமைந்து வருகிறது. தவெக 107 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஆட்சிக்கு தேவையான மெஜாரிட்டி இடங்கள் கிடைக்காததால், திமுக கூட்டணியில் வென்ற காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. திமுக கூட்டணியில் தற்போது தேமுதிக, மமக, கொமதேக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தநிலையில், திமுக கூட்டணியில் இருந்து வந்துள்ள கட்சிகள் தன் பக்கம்தான் இருக்கின்றன. இடைத்தேர்தலுக்கு முன்னதாக புதிய கூட்டணிகள் தங்கள் கட்சியுடன் இணைந்துள்ளன என்பதை காட்டுவதற்காக தவெக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. குறிப்பாக ஆட்சி அமைந்த பிறகு சட்டம் ஒழுங்கு நிலை மோசமானது, போதைப் பொருளை கட்டுப்படுத்தாதது, பெண்கள் குற்றங்கள் அதிகரிப்பு, மக்கள் பிரச்னைகளை கவனம் செலுத்தாமல், மின் தட்டுப்பாடு, காவிரி விவகாரத்தில் தோல்வி என பல்வேறு பிரச்னைகளை தீர்க்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் மக்களிடமும் வெறுப்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
அதில் இருந்து மக்களை திசை திருப்பவும், இடைத் தேர்தலில் தவெக வெற்றி பெறவும் திட்டமிட்டு, இந்த கூட்டணிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. ஆனால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதாக காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், மதிமுக போன்ற கட்சிகள் அறிவித்துள்ளன. தற்போது கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ள கட்சிகளுக்கு மக்கள் செல்வாக்கு இல்லாத நிலைதான் தற்போது உள்ளது. விசிகவுக்கு முன்பு மக்கள் செல்வாக்கு இருந்தது. தற்போது அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் ஏற்கனவே தவெகவுக்கு சென்று விட்டனர். இதனால் அவர்களை அவர்கள் கணக்கிற்குத்தான் வைத்துள்ளனர்.
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் ஓரளவு செல்வாக்கு பெற்றுள்ள மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்து விட்டன. தாங்கள் 5 ஆண்டுகளும் ஆட்சிக்கு ஆதரவு தருவோம். ஆனால் கூட்டணி குறித்து உடனடியாக எந்த முடிவும் எடுக்க மாட்டோம் என்று இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்து விட்டன. இது தவெகவின் கூட்டணி முயற்சிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு;
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் முதல்வர் விஜயை தலைமைச் செயலகத்தில் இன்று காலை சந்தித்துப் பேசினர். அப்போது விவசாயிகள் பிரச்னை, மின்சார தட்டுப்பாடு, கடன் தள்ளுபடி, தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் மனு கொடுத்துப் பேசினோம் என்று இரு தலைவர்களும் அறிவித்துள்ளனர். மேலும் வேலையின்மை, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பள்ளிகள், கல்லூரிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆசிரியர் தேர்வாணைய தேர்வில் குளறுபடி, இளைஞர்களுக்கான புதிய அறிவிப்புகளை நிதி நிலை அறிக்கையில் இடம்பெறுவது, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது தொடர்பாகவும் பேசினோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
