பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி கணபதி நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (32). கூலித்தொழிலாளி. மனைவி ரூபி (29). மகன்கள் ரியாஸ் (7), நாகராஜன் (3). தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பிரபாகரன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று நடந்த தகராறுக்கு பிறகு பிரபாகரன் மது அருந்தியதுடன் மனைவி, மகன்களை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக விஷம் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர் விஷத்தை டம்ளரில் ஊற்றி மகன்களுக்கு கொடுக்க முயன்றுள்ளார். அப்போது ரியாஸை அவரது தாயார் ரூபி பிடித்து இழுத்த நிலையில், 2வது மகன் நாகராஜன் வாயில் விஷத்தை ஊற்றி உள்ளார். ஏதுமறியாத மூன்று வயது சிறுவன் அதனை குடித்ததால் வாயில் நுரை தள்ளி மயங்கினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பழநி அரசு மருத்துவமனைக்கு, தாயார் ரூபி மகனை தூக்கி சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் நாகராஜன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பழநி டவுன் போலீசார் பிரபாகரனை கைது செய்தனர்.
