ராமநாதபுரத்தில் பயங்கரம் வீட்டுக்குள் தூங்கிய சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு

ராமநாதபுரம்: மதுரை பாய்கார முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் பாலகணேஷ். இவரது மனைவி கார்த்திகைச்செல்வி (28) நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் ராமநாதபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு வந்துள்ளார். இரவில், ராமநாதபுரம் எம்எஸ்கே நகரில் உள்ள தாய் வீட்டில் இரு மகள்களுடன், கார்த்திகைச்செல்வியின் தம்பி முத்துப்பாண்டி மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்களும் தூங்கியுள்ளனர்.

நேற்று அதிகாலை எழுந்த கார்த்திகைச்செல்வி, அருகில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி சாய் தீப்தியை காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.அக்கம்பக்கம் உறவினர்கள் வீடு, அருகில் உள்ள குளம் போன்ற பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து கார்த்திகைச்செல்வி பஜார் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் அருகில் இருந்த பால்பாண்டி என்பவரின் வீட்டு அருகே இருந்த கிணற்றை ஆய்வு செய்தனர். அப்போது கிணற்று தண்ணீரில் சிறுமி சடலமாக கிடந்தது தெரிந்தது. சிறுமியை கொலை செய்து வீசியிருக்கலாம் என சந்தேகித்து, நெருங்கிய உறவினர் ஒருவர் மற்றும் அருகில் வசித்த இளைஞர்கள் 2 பேர் என மூன்று பேரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: