ஒன்றிய அரசின் 125 நாள் வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுமா? அன்புமணி அறிக்கை

சென்னை: ஒன்றிய அரசின் விக்சித் பாரத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்குவதற்கான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ள ஒன்றிய அரசு, 125 நாள் வேலைத் திட்டம் என்ற புதியத் திட்டத்தை வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தவுள்ளது.

இந்த திட்டத்திற்காக இந்தியா முழுவதும் ரூ.95,692 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழகத்திற்கு ரூ.7,957.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இன்னும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தில் மாநில அரசுகளின் பங்கு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்.

125 நாள் வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதா, அதை எதிர்த்து அரசியல் மற்றும் சட்டரீதியாக எதிர்ப்பு தெரிவிப்பதா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு. இந்த திட்டத்தை அறிவிக்கை செய்யாவிட்டால், தமிழ்நாட்டில் புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாது. எனவே, 125 நாள் வேலை உறுதித் திட்டத்தின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து அந்தத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுமா என்பதை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: