அடையாள அட்டையில் மாணவரின் பெயர், வகுப்பு உள்ளிட்ட விவரங்கள் பிற விவரங்கள் க்யூ.ஆர் குறியீட்டு வடிவில் மட்டுமே இருப்பது தொடர்பாக ஆலோசனை: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று வெளியிட்டுள்ள விளக்க குறிப்பு: பள்ளி மாணவர்கள் எளிதாகவும், விரைவாகவும் வருவாய் துறை சார்ந்த சேவைகளை பெறும் நோக்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, பள்ளி கல்வித் துறையுடன் இணைந்து பள்ளிகளிலேயே சமூக சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. மாணவர்களின் நலன் கருதி இ-சேவை மையங்கள் மூலமாக இந்த சேவைகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் நடந்த நிகழ்வில் மாணவர்களுக்கான அடையாள அட்டை குறித்து வெளியான கருத்துகள் தொடர்பாக சில தவறான புரிதல்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து விளக்கம் அளிக்கிறேன். மாணவர்களுக்கான சமூக சான்றிதழ் வழங்குவது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, பள்ளி கல்வித் துறையுடன் இணைந்து செயல்படும்.

ஆனால், மாணவர்களுக்கான அடையாள அட்டையின் வடிவமைப்பு, அதில் இடம்பெறும் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் பள்ளி கல்வித் துறையின் பரிசீலனை மற்றும் முடிவிற்கு உட்பட்டவையாகும். மாணவர் அடையாள அட்டையில் இடம்பெற உள்ள விவரங்கள் குறித்து தற்போது துறைகளுக்கு இடையேயான ஆலோசனை நடந்து வருகின்றன.

அத்துடன், மாணவர்களின் தனியுரிமை மற்றும் தகவல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், எதிர்காலத்தில் ஏதேனும் மின்னணு தகவல் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டாலும், மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர் மற்றும் ரத்த வகை போன்ற அடிப்படை விவரங்கள் மட்டுமே வெளிப்படையாக இடம்பெறவும், பிற விவரங்கள் தேவைக்கேற்ப பாதுகாப்பான க்யூஆர் குறியீட்டு வடிவில் மட்டுமே அணுகக்கூடியதாக இருக்க வேண்டும்

என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடந்து வருகின்றன. இதுதொடர்பான அனைத்து அம்சங்களும் சம்பந்தப்பட்ட துறைகளின் விரிவான ஆலோசனைக்கு பின்னரே முடிவு செய்யப்படும். எனவே, சமூக விவரங்கள் மாணவர் அடையாள அட்டையில் இடம்பெற உள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: