×

கடம்பூர் மலைப்பகுதியில் புதிதாக 2 பி.எஸ்.என்.எல் டவர் அமைத்தும் பயனில்லை

*தொலைதொடர்பு வசதி இல்லாததால் மலை கிராம மக்கள் அவதி

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பல்வேறு மலை கிராமங்களில் தொலைதொடர்பு வசதி இல்லாததால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி, ஆசனூர், கேர்மாளம், மற்றும் கடம்பூர் மலைப்பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் பெரும்பாலும் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருமானம் ஈட்டுகின்றனர்.

அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலை கிராமங்களை பொறுத்தவரையில் பெரும்பாலான அடிப்படை வசதிகள் சென்று சேரவில்லை எனவே கூறலாம். குறிப்பாக, தலமலை வனச்சரகத்திற்குட்பட்ட காளி திம்பம் மாவநத்தம் பெஜலட்டி இட்டறை தடசலட்டி, ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள மாவள்ளம், கோட்டாடை தேவர்நத்தம் ஒசட்டி, குளியாடா, கானக்கரை, கேர்மாளம், ஜே.ஆர்.எஸ்.புரம், ஒரத்தி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் செல்போன் டவர் அமைக்கப்படாததால் முற்றிலுமாக தொலைதொடர்பு வசதி ஏற்படுத்தப்படவில்லை.

தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி கற்பதற்கு இணையதளம் மூலம் ஆன்லைன் வசதி அத்தியாவசியமாக உள்ளது. செல்போன் சிக்னல் இல்லாததால் இந்த மலை கிராமங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலை கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லாததால் அங்கு வசிக்கும் மக்கள் நகரப் பகுதியில் வசிப்பவர்களை காட்டிலும் 50 ஆண்டுகள் பின்தங்கி உள்ளனர்.

இந்த மலை கிராமங்களுக்கு தொலைதொடர்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும், அவ்வப்போது பிஎஸ்என்எல் அதிகாரிகள் மலை கிராமங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவது மட்டுமே தொடர்கதையாக உள்ளது. செல்போன் டவர் அமைப்பதற்கான நடவடிக்கைகளை தற்போது வரை மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில், ஏற்கனவே கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையம் மற்றும் கரளயம் ஆகிய பகுதிகளில் பல கோடி ரூபாய் செலவில் இரண்டு பிஎஸ்என்எல் டவர்கள் அமைக்கப்பட்ட நிலையில் அதிநவீன வசதி கொண்ட 4 ஜி வசதி ஏற்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில் டவர் அமைத்து இரண்டு ஆண்டு காலம் ஆகியும் இதுவரை புதிய டவர்கள் மூலம் சேவைகள் சரிவர தொடங்கப்படவில்லை.

இதனால், செல்போன் டவர் அனைத்தும் பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் கேட்டால் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் மட்டுமே தருகிறார்கள். நடவடிக்கை இல்லை.

எனவே, மேற்கண்ட மலை கிராமங்களில் தொலைத்தொடர்பு வசதி இல்லாத கிராமங்களுக்கு உடனடியாக செல்போன் டவர்கள் அமைத்து தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தி அங்குள்ள மக்களும் பயன் பெற ஏற்பாடு செய்ய வேண்டும். கடம்பூர் மலைப்பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்ட இரண்டு செல்போன் டவர்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Kadampur Highland S. N. ,L Tower ,Satyamangalam ,Satyamangalam Tigers Archive ,Erode District Talawadi ,Asanur ,Karmalam ,
× RELATED விவசாயியிடம் லஞ்சம் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!