×

நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடி பணிகள் தீவிரம்

*உரங்கள் விலை உயர்வால் விவசாயிகள் அவதி

நெல்லை : நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விவசாய உரங்களின் கடும் விலை உயர்வும், உரத்தட்டுப்பாடும் விவசாயிகளை பாதித்து வருகிறது.தென்மேற்கு பருவமழையை நம்பி ஆண்டுதோறும் விவசாயிகள் கார் சாகுபடியை நடத்துவது வழக்கம்.

இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு இன்னமும் பெய்யவில்லை. இருப்பினும் அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, விவசாயிகள் கார் சாகுபடியை தொடங்கியுள்ளனர். கடைமடை விவசாயிகள் இவ்வாண்டு கார் சாகுபடி கை கொடுக்காது என்ற நிலையில், நாற்று பாவுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.

மற்ற பகுதிகளில் விவசாயிகள் நாற்று பாவி, நாற்றுக்களை கட்டு, கட்டுகளாக வயல்களுக்கு கொண்டு செல்கின்றனர். சில இடங்களில் திருந்திய நெல் சாகுபடிக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில் கார் சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதுமான அளவில் கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதிலும் தனியார் உரக்கடைகளில் யூரியா உள்ளிட்ட உரங்களை வாங்க சென்றால், மேலுரங்களை வாங்க சொல்லி வலியுறுத்துவதால் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். மேலும் உர விலை உயர்வும் விவசாயிகளை பாதித்து வருகிறது.

50 கிலோ எடையுள்ள காம்ப்ளக்ஸ் உரங்கள் இதுவரை ரூ.1,300க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.2,100 வரை விற்பனை செய்யப்படுகின்றன. ஒரேசமயத்தில் ரூ.700 முதல் ரூ.800 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதால், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உரத்தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால் சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட பிறகும், உரம் கிடைக்காத சூழல் நிலவுகிறது. உர விலை உயர்வை கட்டுப்படுத்துவதோடு, அனைத்து கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களிலும் போதுமான அளவில் உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Tags : Nellai district ,Nellai ,
× RELATED விவசாயியிடம் லஞ்சம் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!