சேலம் அருகே செலவுக்கு ரூ.30 பணம் கேட்டு பாட்டியை கத்தியால் குத்தி கொன்ற 16 வயது பேரன்

*போலீசில் சரண்

இடைப்பாடி : இடைப்பாடி அருகே, செலவுக்கு பணம் தராததால், பாட்டியை கத்தியால் குத்தி கொலை செய்த 16 வயது சிறுவன், போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகேயுள்ள கொங்கணாபுரம் கரட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி மனைவி கந்தாயி (75). இவருக்கு 3 மகள்களும், சுப்பிரமணி என்ற மகனும் உள்ளனர்.

அனைவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி கன்னியம்மாள் ஆகிய இருவரும், கடந்த 2 ஆண்டுக்கு முன் இறந்து விட்டனர். இதனால், இவர்களது 16 வயது மகன், பாட்டி கந்தாயி மற்றும் உறவினர் அபிஷேக் வீட்டில் தங்கி வந்துள்ளான்.

இந்த சிறுவன் படிக்க பிடிக்காததால், 9ம் வகுப்புடன் பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தான். இதனிடையே, டெல்லியில் உள்ள உறவினர்களை பார்க்கவும் அந்த சிறுவன் அடிக்கடி சென்று வந்துள்ளான். இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன், டெல்லியில் இருந்து கொங்கணாபுரம் கரட்டுவளவுக்கு அந்த சிறுவன் வந்தான்.

இதனிடையே, கொங்கணாபுரம் கரட்டுவளவு பகுதியில், தாத்தா கந்தசாமியின் பெயரில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில், தனது பாகத்தை பிரித்து கொடுக்குமாறு, சிறுவன் தனது பாட்டி கந்தாயியிடம் அடிக்கடி கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளான்.

ஆனால், அதற்கு கந்தாயி மறுத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை பாட்டியிடம் செலவுக்கு ரூ.30 பணம் வேண்டும் என சிறுவன் கேட்டுள்ளான். ஆனால், அவர் தரமாட்டேன் என கூறியதால், ஆத்திரம் அடைந்த சிறுவன், அங்கிருந்த கட்டையை எடுத்து கந்தாயியின் பின்மண்டையில் ஓங்கி அடித்துள்ளான்.

பின்னர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், கழுத்து மற்றும் வயிற்றில் குத்தியுள்ளான். இதில் கந்தாயி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வீட்டிற்கு வந்த சிறுவனின் உறவினர் அபிஷேக், படுகாயமடைந்த கந்தாயியை மீட்டு, இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு டூவீலரில் அழைத்து சென்றார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கந்தாயி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனிடையே, அந்த சிறுவன் தனது பாட்டியை கத்தியால் குத்தி கொன்று விட்டதாக கூறி, கொங்கணாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் சென்று சரணடைந்தான்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற சங்ககிரி டிஎஸ்பி சுரேஷ்குமார், கொங்கணாபுரம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், கந்தாயி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இடைப்பாடி அருகே, 16 வயது சிறுவன் பாட்டியை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: