பிறந்து 10 நாட்களே ஆன நிலையில் ரூ.2 லட்சத்திற்கு பெண் குழந்தை விற்பனை: ராமேஸ்வரத்தில் மீட்பு; புரோக்கர் உள்பட 3 பேர் கைது

சேலம்: சேலம் கொண்டலாம்பட்டி அருகேயுள்ள அரியானூரைச் சேர்ந்தவர் சீனிவாசன். தறித்தொழிலாளியான இவருக்கு ஒரு மகன், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவரது மனைவி மீண்டும் கர்ப்பமடைந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு, அழகான பெண் குழந்தை பிறந்தது. வறுமையில் தவித்த நிலையில், அந்த குழந்தையை 2 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டதாக 1098 உதவி மையத்திற்கு புகார் வந்தது.

இதையடுத்து சேலம் குழந்தைகள் நல குழும அதிகாரிகள், அரியானூர் பகுதிக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, ஏற்கனவே 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், வளர்க்க முடியாத காரணத்தினால், வேறொருவர் வளர்ப்பதற்காக குழந்தையை கொடுத்ததாக சீனிவாசன் தம்பதியினர் தெரிவித்தனர். மேலும், அந்த பெண் குழந்தையை உறவினர்கள் மூலமாக ராமேஸ்வரத்தை சேர்ந்த முத்துலட்சுமி (45) என்பவர் வாங்கி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து கொண்டலாம்பட்டி போலீசார் உதவியுடன் குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள், குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உடனடியாக ராமேஸ்வரம் கீழக்கரை புறப்பட்டு சென்று, முத்துலட்சுமியிடம் இருந்து குழந்தையை மீட்டு சேலம் கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக போலீசாரின் விசாரணையில், வறுமை காரணமாக குழந்தையை விற்பனை செய்தது தெரியவந்தது. முதலில் ரூ.10 ஆயிரத்திற்கு பெண் குழந்தையை விற்பனை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால், குழந்தையை வாங்கியவர்கள், ரூ.2 லட்சம் கொடுத்ததும், அதில் ரூ.50 ஆயிரத்தை புரோக்கர் ராமமூர்த்தி என்பவர் கமிஷனாக எடுத்துக் கொண்டு, மீதி ரூ.1.50 லட்சத்தை குழந்தையின் பெற்றோரான சீனிவாசன் தம்பதிக்கு கொடுத்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக குழந்தையை வாங்கிய முத்துலட்சுமி(45), அவரது கணவர் இந்திரகுமார்(49) மற்றும் புரோக்கர் ராமமூர்த்தி (65) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமையின் காரணமாக பெண் குழந்தையை விற்பனை செய்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: