இந்த ஆண்டு மட்டும் மின்துறையில் ரூ.50,000 கோடி கடன் வாங்கத் திட்டம் பார்ட்டி பண்ட் கேட்டதாக இதுவரை யாரும் புகார் தெரிவிக்கவில்லை: வெள்ளை அறிக்கை வெளியிட்டு அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பேட்டி

சென்னை: இந்த ஆண்டு மட்டும் மின்துறையில் சுமார் ரூ.50,000 கோடி கடன் வாங்கத் திட்டம் எனவும் பார்ட்டி ஃபண்ட் கேட்டதாக இதுவரைக்கும் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்றும் வெள்ளை அறிக்கை வெளியிட்டு அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில் உள்கட்டமைப்பு, நிதி, மனிதவளம், தளவாடப் பொருட்கள், நடைபெற்று வரும் திட்டப்பணிகள், வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையினை மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: வெள்ளை அறிக்கையில் 2001 முதல் 2026 வரையிலான வருமானம், செலவு, உள்கட்டமைப்பு உள்ளிட்டவை குறித்துத் தெரிவித்துள்ளோம். 2001-06 ரூ. 59,084 கோடி வருவாய், ரூ‌. 67,439 செலவு, ரூ.8,355 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 2006-11 ரூ.92,737 கோடி வருவாய், ரூ‌.1,28,200 செலவு, ரூ.35,463 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

2011-16 வரை ரூ.1,92,971 கோடி வருவாய், ரூ.2,49,332 கோடி செலவு, ரூ. 56,361 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது‌‌. 2016-21 வரை ரூ.3,20,140 கோடி வருவாய், ரூ.3,78,674 செலவு, ரூ. 58,534 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது‌‌. 2021-26 ரூ.4,97,996 கோடி வருவாய், ரூ.5,32,443 கோடி செலவு, ரூ. 34,447 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது‌‌.
மின்சார வாரியத்திற்கு தற்போது மொத்தமாக ரூ.2,47,130 கோடி கடன் உள்ளது.

கடந்த 2021-26 காலகட்டத்தில் மட்டும் ரூ.87,399 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் வருமானமும், செலவீனமும் அதிகரித்துள்ளது போல் கடனும் அதிகரித்துள்ளது. ஆனாலும் போதுமான உள்கட்டமைப்பைை மேற்கொள்ளவில்லை. தமிழ்நாடு மின்வாரியத்தில் மொத்த ஊழியர்களின் தேவை 1,40,635 பேர். தற்போது பணி புரிபவர்கள் 74,714, காலியாக உள்ள பணியிடங்கள் 65,921. அடுத்த 5 வருடங்களில் 16,282 பேர் பணி ஓய்வு பெற உள்ளார்கள். ஆள் பற்றாக்குறையால் இந்தத் துறையில் பணிச்சுமை அதிகமாக உள்ளது.

அதனால், இந்த ஆண்டு 15,058 பணியாளர்களை வேலைக்கு எடுக்க உள்ளோம். அதேபோல், 2021ம் ஆண்டு எடுக்கப்பட்ட 5,391 கேங்மேன்களையும் வேலைக்கு எடுத்து நிறுத்திவைக்கப்பட்ட அவர்களையும் சேர்த்து மொத்தமாக 20,449 பேரை வேலைக்கு எடுக்கவுள்ளோம். மேலும், மின்வாரியத்தில் எவ்வளவு ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளார்கள் என்பது தொடர்பான தகவல்களைச் சேகரித்து வருகிறோம். சோலார், காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட கிரீன் எனர்ஜி திட்டத்திற்கு பார்ட்டி பண்ட் வாங்கியுள்ளார்கள்.

பார்ட்டி பண்ட் கொடுத்துக் கிடைக்காமல் இருப்பவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு திரும்பவாங்கிக் கொடுக்கிறோம். 2026-27ம் ஆண்டில் வேலைக்கு ஆட்கள் எடுப்பது, உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட காரணங்களுக்கு ரூ.49,532 கோடி முதலீடு செய்யவுள்ளோம். அதைக் கடனாகத்தான் பெறவுள்ளோம். மின்துறையைத் தனியாரிடம் கொடுக்கமாட்டோம். மின் உற்பத்தியில் மட்டும் தனியாரை ஈடுபடுத்துவோம். பார்ட்டி பண்ட் மற்றும் 30 சதவீதம் கமிசன் வாங்கப்பட்டது தொடர்பாக இதுவரை யாரும் புகார் தெரிவிக்கவில்லை.

யாராவது பணம் கொடுத்தது தொடர்பாகப் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்மார்ட் மீட்டர் தொடர்பாக இன்னமும் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால், ஒன்றிய அரசின் அழுத்ததால் தமிழகத்தில் 6 லட்சம் அரசுக் கட்டிடங்களில் மட்டும் இதைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அளவீடு எடுப்பவர்களின் பற்றாக்குறையால் மாதம் ஒருமுறை மின் பயன்பாடு கணக்கீடு எடுப்பதைப் பற்றி யோசிக்கக்கூட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: