பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநியில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: டாஸ்மாக்கில் அனைத்து பக்கமும் பாட்டிலுக்கு ரூ.10, ரூ.20 கூடுதலாக வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அந்த தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதெல்லாம் வெளியில் தெரியும் உலகிற்கு அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் தெரிவதில்லை. ஒரு வேளை நான் சொல்லாமல் இருக்கிறேனா?.
தினமும் பத்திரிகையாளர்களை சந்தித்து இன்று இந்த கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்க வேண்டிய சூழல் உள்ளது. கூடுதலாக பணம் பெறுவதாக புகார் வந்தால், அதன்மீது நிச்சயம் நடவடிக்கை இருக்கும். டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையும் நியாயமானதுதான். ரூ.11 ஆயிரத்தை கொண்டு வாழ்க்கை நடத்துவது சிரமம் என்கின்றனர். ஆனால், சொந்த நிறுவனமாக இருந்தால் கூடுதல் ஊதியத்தை உடனடியாக வழங்கி விடலாம்.
அரசு நிர்வாகம் என்பதால் ஒரு முறை உள்ளது. டாஸ்மாக் ஊழியர்களின் ஊதிய உயர்வு பரிசீலனையில் உள்ளது. டாஸ்மாக்கை தனியாருக்கு வழங்கும் எண்ணமில்லை. அடிக்கடி கேட்பதால் எங்களுக்கு ஒரு யோசனை வரத்தான் செய்கிறது. எங்களது பரிசீலனையில் அது இல்லை. இன்னும் 2 முறை கேட்டால் அது குறித்து யோசிப்பேன். டாஸ்மாக் துறையே ஒரு வெள்ளை அறிக்கைதான். அதில் உள்ள அனைத்தும் வெளிப்படையாக தெரிகிறது. இவ்வாறு கூறினார்.
* அமைச்சர் கூட்டத்தில் ‘பவர் கட்’
பழநி தாலுகா அலுவலகத்தில் நேற்று வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சியில் அமைச்சர் விக்னேஷ் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலெக்டர் துர்காமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். அமைச்சர் மனுக்கள் பெறும் அரங்கில் நுழைந்த நிலையில் மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டது. 30 நிமிடங்களுக்கும் மேல் மின்சாரம் வரவில்லை. மேலும் மனுக்கள் பெறும் அரங்கிற்குள் தவெக நிர்வாகிகள் திமுதிமுவென நுழைந்தனர்.
மின்விசிறிகள் ஓடாத நிலையில் கடுமையான கூட்ட நெருக்கடி ஏற்பட்டதால், அமைச்சரிடம் மனுக்கள் கொடுப்பதற்காக காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கூட்டத்திற்குள் தவெக நிர்வாகிகளும் முண்டியடித்து வந்ததால் கடும் நெருக்கடி நிலவியது. இதனால் ஆங்காங்கே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசு நிகழ்ச்சியில் தவெகவினர் இச்செயல் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
