கோவை: தவெக அரசில் ஐஏஎஸ் அதிகாரிகள் அரசியல்வாதிகளை போல பேசுவதாக கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார். கோவை தனியார் நட்சத்திர ஓட்டலில் துணிநூல் துறை சார்பில் தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், தொழில்நுட்ப ஜவுளித்துறையில் முதலீடு மற்றும் பல்வகைப்படுத்தலை ஊக்குவிக்கும் வகையில் மொத்தம் ரூ.123 கோடி மதிப்பிலான 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில், அரசு முதன்மை செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட கலெக்டர் பவன்குமார், தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்கம், துணிநூல் ஆணையரக இணை இயக்குநர் ராகவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அமைச்சர் விஜய் பாலாஜி பேசியதாவது: தவெக ஆட்சி ஆரம்பித்தது முதலே எல்லாமே மாற்றம் தான். ஐஏஎஸ் அதிகாரியே அரசியல்வாதியாக பேசுகிறார். எனக்கு தெரியாத பல விஷயங்களும் உள்ளது. அப்படி இருக்கும் போது முதன்மை செயலாளரிடம் கேட்டு செயல்படுகிறேன். தற்போது பங்களாதேஷ்-க்கு ஆர்டர்கள் எல்லாம் செல்கிறது. அதனை மீட்டு கொண்டு வரும் நடவடிக்கையை அரசு செய்யும். விஷன் 2026-ன் முக்கிய முன் முயற்சியாக திருப்பூரில் பொது தனியார் கூட்டாண்மை முறையில் தொழில்நுட்ப ஜவுளி மையம் அமைக்க அரசு பரிசீலித்து வருகிறது.
தொழில் துறை மற்றும் துணிநூல் துறை ஆகியவை ஒருங்கிணைந்து தொழில்முனைவோருக்கு தேவையான ஆதரவை வழங்கும். பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைத் திட்டத்தின் மீது எனது முழு கவனமும் உள்ளது. நெசவாளர்கள் பாதிக்கப்படக்கூடாது. அதே நேரத்தில் பொதுமக்களுக்கும் தரமான பொருட்கள் வழங்கப்பட வேண்டும். இதுவே அரசின் முக்கிய நோக்கமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
