திருவிக, நேரு பூங்கா மற்றும் பனகல் பூங்காவில் பசுமை பரப்பை நீதிபதி தண்டபாணி ஆய்வு

சென்னை: திருவிக பூங்கா, நேரு பூங்கா மற்றும் பனகல் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பசுமை பரப்பை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் பணிகள் மேற்கொள்ளப்பட்ட திருவிக பூங்கா நேரு பூங்கா மற்றும் பனகல் பூங்காவில் ஏற்கனவே இருந்த பசுமை பரப்பை மீண்டும் உருவாக்கி அதன் வசதிகளை உறுதி செய்திட உயர் நீதிமன்றத்தால் பொதுநல வழக்கில் உத்தரவு வழங்கி, அதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கை மற்றும் ஆலோசனை வழங்கிட ஆணையம் ஏற்படுத்தி உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில், திருவிக பூங்கா, நேரு பூங்கா மற்றும் பனகல் பூங்கா ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள பசுமை பரப்பு நடவடிக்கைகளை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உயர் நீதிமன்ற நீதிபதி அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள திருவிக பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பசுமை பரப்பை பார்வையிட்டு ஆய்வு செய்து, தொடர்ந்து பராமரித்திட அறிவுரைகள் வழங்கினார்.

இப்பூங்காவின் வெளிப்பகுதியில் உள்ள புல்லா அவென்யூ சாலையில் ரூ.52.68 கோடி மதிப்பீட்டில் 1600 மீட்டர் நீளத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் அமைக்கும் பணியையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.  இதனைத் தொடர்ந்து, அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள நேரு பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பசுமை பரப்பை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பூங்காவில் மரக்கன்று நட்டார்.

பின்னர், கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள பனகல் பூங்காவில் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு, பூங்காவில் மேற்கொள்ளப்பட வேண்டிய பசுமை பரப்பு பணிகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினர். இந்த பூங்காவில் மேற்கொள்ளப்படும் சென்னை மெட்ரோ ரயில் நிலைய பணிகளுக்காக, போட் கிளப், நந்தனம், பனகல் பூங்கா, கோடம்பாக்கம், கோடம்பாக்கம் ரேம்ப் ஆகிய பகுதிகளில், பசுமைக்குழுவின் அனுமதியுடன் 278 மரங்கள் அகற்றப்பட்டன.

அகற்றப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கு பதிலாகவும் 12 மரங்கள் வைக்கும் நடவடிக்கையாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால், நந்தனம் அரசு கலைக்கல்லூரி, திருவள்ளூர் உள்ள மீனாட்சி கல்லூரி, அம்பேத்கர் சட்ட கல்லூரி, லேடி வெலிங்டன் கல்லூரி ஆகியவற்றில் 2022ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை 3,745 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இத்திட்ட செயலாக்கப் பகுதிகளில் இருந்து 137 மரக்கன்றுகளை அகற்றி, அதனை லேடி வெலிங்டன் கல்லூரியில் மீண்டும் நடப்பட்டுள்ளன.

இதன் விவரங்களை நீதிபதி கேட்டறிந்து ஆய்வு செய்து நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை பசுமை குன்றாமல் பராமரித்திடவும், இப்பூங்காவில் சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிவடையும்போது, இப்பூங்கா பகுதியில் மீண்டும் பசுமைப் பரப்பை உருவாக்கிடவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வுகளின்போது, அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார், மாநகராட்சி ஆணையர் சமீரன், மத்திய வட்டார துணை ஆணையர் கவுஷிக், போக்குவரத்து காவல் துணை ஆணையர்கள் பெரோஸ்கான், முத்துக்குமார், நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட ஆணைய வழக்கறிஞர் செவனன் மோகன், மாநகராட்சி முதுநிலை சட்ட அலுவலர் ஜேக்கப் ராஜன் பாபு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வழக்கறிஞர் விஜய் மற்றும் மாநகராட்சி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: