டி.யு.சி.எஸ் கூட்டுறவு சங்கத்தில் லட்சக்கணக்கில் பருப்பு கொள்முதல் ஊழல்: அதிகாரிகள் மீது தொமுச புகார்

 

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தில் (டி.யு.சி.எஸ்) பருப்பு கொள்முதலில் லட்சக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதிகாரிகள் மீது கூட்டுறவு சங்கப் பதிவாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திராவிட தொ.மு.ச பொதுச்செயலாளர் ராஜன். சாமிநாதன் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டி.யு.சி.எஸ் செயலாட்சியராகப் பணிபுரியும் கே.தேவிப்பிரியா கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடைமுறைகள் தொடங்கியது முதல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். மே மாதம் நடைபெற்ற ஜேபிசி கூட்டத்தில், வெளிச்சந்தையில் மொத்த விலை ரூ. 85-க்குக் கிடைக்கும் “பர்மா துவரம்பருப்பை” ஒரு குறிப்பிட்ட வியாபாரி மூலம் கூடுதல் விலைக்குக் கொள்முதல் செய்துள்ளார் . இதன் மூலம் அவர் ரூ.3,24,000 சுயலாபம் அடைந்துள்ளார்.

ஒட்டுமொத்த கொள்முதல் மூலம் ரூ. 20 முதல் 25 லட்சம் வரை முறைகேடாகச் சம்பாதிக்கப்பட்டுள்ளது..மேலும், ஜூன் மாதம் பருப்பு விலை கிலோவுக்கு ரூ. 13 குறைந்த நிலையிலும், மே மாத விலையான ரூ. 127-க்கே கொள்முதல் செய்ததால் நிறுவனத்திற்கு ரூ. 1,56,000 நிதி இழப்பு ஏற்படுத்தியுள்ளார். விதிமீறல் செய்து சிலருக்குப் பணி உயர்வும் வழங்கியுள்ளார்.

இதற்கு துணை போகும் நிர்வாக அலுவலர் தெய்வநாயகி, சுமார் 300-க்கும் மேற்பட்ட கோப்புகளைத் தேக்கம் அடையச் செய்துள்ளார் . கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே முடிந்த கோப்பை இன்னும் முடிக்காமல் இழுத்தடிப்பதால் 24 தொழிலாளர்களின் பணி உயர்வு மற்றும் ஓய்வூதியப் பலன்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், அலுவலக வாகனத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்தி நிறுவனத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்துகிறார் .எனவே, இந்த இரு முறைகேட்டு அலுவலர்கள் மீதும் பதிவாளர் அவர்கள் உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related Stories: