அதிகாரிகள் அலட்சியத்தால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் பேருந்து நிறுத்த நிழற்குடை

*பொதுமக்கள், பயணிகள் வெயிலில் காத்திருக்கும் அவலம்

வல்லம் : தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் கோவில்பத்து பேருந்து நிறுத்த நிழற்குடை, அதிகாரிகளின் அலட்சியத்தால் சிதிலமடைந்து, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.

இதனால், இந்த நிழற்குடையைப் பயன்படுத்த வேண்டிய பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பஸ்சிற்காக வெயிலில் காத்திருக்கும் அவலநிலை உள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் கோவில்பத்து பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கிருந்து தஞ்சாவூருக்கு நாள்தோறும் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சென்று வருகின்றனர்.

பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்காக இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து சித்திரக்குடி, கள்ளப்பெரம்பூர், தஞ்சாவூர் பகுதிக்கு செல்ல பஸ்சிற்காக காத்திருந்து சென்று வருகின்றனர். இங்கு இருந்த பழைய பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டு புதிதாக சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய நிழற்குடை கட்டப்பட்டது.

ஆனால் அந்த நிழற்குடையின் தற்போதைய நிலை பரிதாபமாக உள்ளது. இதனால் தற்போது நிலவி வரும் கடுமையான வெயில் தாக்கத்தில் இருந்து ஒதுங்ககூட நிழற்குடை இடமில்லாமல், மாணவர்கள் சாலையோர மரங்களின் நிழலிலும், கடைகளின் ஓரங்களிலும் தஞ்சமடையும் அவலநிலை உள்ளது.

திடீரென மழை பெய்யும் போது, பேருந்து நிறுத்தத்திற்குள் செல்ல முடியாமல் நனைந்தபடியே பேருந்துகளில் ஏற வேண்டியுள்ளது. இதனால் மாணவர்களின் புத்தகப் பைகள் நனைவதுடன், அடிக்கடி உடல்நலக் குறைபாடும் ஏற்படுகிறது.

பேருந்துகள் உரிய நேரத்திற்கு வராத சமயங்களில், பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. நிழற்குடையின் உள்ளே இருக்கும் சிமெண்ட் அமரும் தளம் முழுவதும் வறண்ட மண் படிந்தும், அசுத்தமாகவும் காட்சியளிக்கிறது. இதனால், முதியவர்கள், உடல்நலக் குறைபாடுள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் கால்கடுக்க நின்றுகொண்டே பஸ்சிற்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது.

நிழற்குடையின் முன்பகுதி முழுவதும் கரடுமுரடான மண் மேடாகவும், உடைந்துபோன கற்களுடனும் காணப்படுவதால் முதியவர்கள் நிலைதடுமாறி விழும் அபாயமும் நீடிக்கிறது. நிழற்குடையைச் சுற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்கள் மற்றும் குப்பைக் கூளங்கள் சிதறிக் கிடக்கின்றனதேங்கிக் கிடக்கும் குப்பைகளால் அந்தப் பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.

மேலும், அருகில் மண்டியுள்ள முட்புதர்களால் கொசு உற்பத்தி அதிகரித்து, டெங்கு, மலேரியா போன்ற நோய்த்தொற்றுகள் பரவும் அபாயத்தில் பொதுமக்கள் அச்சத்துடன் காத்திருக்கின்றனர்.

இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததையும், இந்த நிழற்குடையின் பாழடைந்த நிலையையும் பயன்படுத்தி, சிலர் இங்கு மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், மாலை நேரங்களுக்கு மேல் இங்கு பஸ்சிற்காக காத்திருக்க பெண் பயணிகள் மற்றும் மாணவிகள் கடும் அச்சமடைகின்றனர்.

பொதுமக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட ஒரு பொதுச்சொத்து, இப்படி யாருக்கும் பயன்படாமல் வீணாவதைச் சுட்டிக்காட்டும் இப்பகுதி மக்கள், \”அதிகாரிகள் வெறும் காகித அளவிலான திட்டங்களை விடுத்து, களத்திற்கு வந்து இந்த அவல நிலையைப் பார்க்க வேண்டும். உடனடியாக இந்த பேருந்து நிறுத்த நிழற்குடையை சீரமைத்து, மக்கள் நிம்மதியாகப் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்\” என ஆவேசத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விஷப்பூச்சிகள் நடமாட்டம்

நிழற்குடையை ஒட்டியுள்ள புதர்களில் இருந்து பல்வேறு விஷப்பூச்சிகள் அசுத்தமாக உள்ள நிழற்குடைக்குள் புகுந்துவிடுவதால், உள்ளே கால் வைக்கவே மக்கள் அஞ்சுகின்றனர். பகலிலேயே மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு அசுத்தமாக இருக்கும் இந்த நிழற்குடை, இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் சட்டவிரோத செயல்களுக்கான கூடாரமாக மாறிவிடுகிறது.

Related Stories: