*பிள்ளைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோர்
ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் அருகே உள்ள அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட மராட்டிப்பாளையம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு மாணவர்களின் நலனுக்காக இயங்கி வந்த அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர். இங்கு ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் பணியாற்றி வருகின்றனர்.
இங்குள்ள பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அவை முழுவதும் சிதிலமடைந்து சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு பாழடைந்து காணப்பட்டது.
இதுதொடர்பாக, செய்தி தாள்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி வரவே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவர்களின் நலனுக்காக பழுதடைந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.
இதனால், ஒரு சில மாதங்கள் அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் மாணவர்கள் பயின்று வந்தனர். ஆனால், அரசு அதிகாரிகள் அங்கன்வாடி கட்டிடத்தில் மாணவர்களை படிக்க அனுமதிக்கவில்லை.
அதற்கு மாறாக அதே பகுதியில் தனி நபருக்கு சொந்தமான மேற்கூரைகள் தகர சீட்டுகளால் ஆன வாடகை கட்டிடத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை படிக்க அனுமதித்தனர்.அன்று முதல் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கழிவறை, குடிநீர், உணவு சாப்பிட இடம் இல்லாமலும், மின்சார வசதி என எந்த ஒரு அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் கடும் இன்னல்களுக்கு நடுவே பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
அதேபோல், மாணவர்கள் பயின்று வரும் கட்டிடத்தின் மேற்கூரை தகர சீட்டுகளால் ஆனதால் கடும் வெயிலின் தாக்கத்தால் வெப்பம் அதிகரித்து மாணவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘மாணவர்களின் பாதுகாப்பு கருதி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அரசு பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டு விட்டது.
இப்போது அவை காலி மைதானமாக இருந்து வருகிறது. மேலும், அரசு பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டதால் பள்ளி மாணவர்கள் குறுகிய இக்கட்டான இடத்தில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக பயின்று வருகின்றனர்.
இந்த வாடகை கட்டிடத்தில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. மாணவர்கள் கழிவறைக்கு சென்றாலும், உணவு சாப்பிட சென்றாலும் அவர்களை ஆசிரியர்கள் சாலையை கடந்து தான் அழைத்து சென்று வருகின்றனர்.
அதேபோல், காலியாக உள்ள பள்ளி வளாகத்தில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் மது குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து விடுகின்றனர்.மேலும், இந்தாண்டு ஏராளமானோர் தனியார் பள்ளியில் படித்து வந்த தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர்.
ஆனால் எந்த ஒரு அடிப்படி வசதிகளும் இல்லாததால் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு தெரிவிக்கின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய பள்ளி கட்டிடங்களை விரைவில் கட்டி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
