மானாமதுரையில் புதிய அங்கன்வாடி மையம் செயல்பாட்டிற்கு வருமா?

*பெற்றோர் எதிர்பார்ப்பு

மானாமதுரை : மானாமதுரை கன்னார்தெரு செட்டிக்குளம் அங்கன்வாடி மையத்திற்கு புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தினை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார்தெரு செட்டிக்குளம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

தற்போது அங்கன்வாடி மையம் பழைய கட்டிடத்திலேயே செயல்பட்டு வருகிறது. இங்கு 35க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்று வரும் நிலையில், கட்டிடத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் குழந்தைகளும் ஆசிரியர்களும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில் நகராட்சி சார்பில் புதிய கட்டிடம் ரூ.19 லட்சம் செலவில் கட்டப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் பணிகள் முடிந்த நிலையில் தேர்தல் விதிமுறைகள் காரணமாக கட்டிடம் திறப்பது தள்ளி வைக்கப்பட்டது. இதனால் குழந்தைகள் பழைய கட்டிடத்திலேயே மாணவர்கள் படித்து வருகின்றனர்.

குறிப்பாக, கட்டிடத்தின் தரைத்தளம் பல இடங்களில் பெயர்ந்து சேதமடைந்துள்ளதுடன், மின்விசிறிகளும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் கடும் வெப்பத்திலும் குழந்தைகள் சிரமத்துடன் கல்வி கற்று வருகின்றனர்.

இது குறித்து பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில், ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, அனைத்து பணிகளும் முடிவடைந்து 5 மாதங்கள் கடந்தும் புதிய கட்டிடம் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்து புதிய ஆட்சி பதவியேற்ற பின்னரும் எதற்காக திறக்கப்படாமல் உள்ளது என்பது தெரியவில்லை. உடனடியாக புதிய கட்டிடத்தை திறந்து குழந்தைகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: