×

பெரம்பூரில் ஒருத்தரை தேடும் பாட்டி குட்டி கதை சொன்ன கவுன்சிலரால் பரபரப்பு

சென்னை: முதல்வரை விமர்சித்து குட்டி கதை சொன்ன பரிதி இளம்சுருதி கவுன்சிலரால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் பேசிய 99 வார்டு திமுக கவுன்சிலர் பரிதி இளம்சுருதி, முதல்வர் விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் குட்டி கதை கூறினார். அவர் பேசியதாவது: பெரம்பூரில் ஒரு வயதான பாட்டி சாலையில் ஒருவரை தேடிக் கொண்டிருந்தாராம். அந்த வழியாக சென்று கொண்டு இருந்தவர் பாட்டி யாரை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என கேட்டாராம்.

அதற்கு பதிலளித்த பாட்டி என் பேரன், பேத்தி சொன்னார்கள் என ஒரு நடிகருக்கு ஓட்டு போட்டேன். ஓட்டு போட்ட பிறகு அவர் ஜெயித்தார் என சொன்னார்கள். ஆனால் இதுவரை அவரை காணவில்லை. இன்னைக்கு வந்து நன்றி சொல்வார், நாளைக்கு வந்து நன்றி சொல்வார் என பார்க்கிறேன். ஆனால் அவர் காணவில்லை. இன்றைக்காவது வருவாரா என பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார். அந்த பாட்டியின் கையில் ஒரு பேப்பர் இருந்தது. அந்த பேப்பரை வழிபோக்கர் வாங்கிப் பார்த்தாராம்.

அதில், ‘மின்வெட்டு பிரச்சனையை எப்போது தீர்ப்பீர்கள்’ என எழுதப்பட்டிருந்ததாம். தன் பிரச்சனையை தீர்க்காமல் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லுகிற நிலையில் சிலர் உள்ளார்கள். எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரை பார்க்க முடியவில்லை. ஒரே இடத்தில் தான் அவர்கள் அனைவரையும் பார்க்க முடிகிறது. இன்ஸ்டாகிராமை ஓபன் செய்தால் தான் பார்க்க முடிகிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்த குட்டி கதையை கேட்டு திமுக உறுப்பினர்கள் அனைவரும் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.

Tags : Perambur ,Chennai ,Councilor ,Parithi Ilamsurudi ,Chief Minister ,Chennai Corporation ,99 Ward DMK ,Vijay… ,
× RELATED உதகை அருகே வீட்டிற்குள் புகுந்த...