குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

*அரக்கோணம் அருகே பரபரப்பு

அரக்கோணம் : அரக்கோணம் அருகே குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் நேற்று அரசு பஸ்சை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ்பாக்கத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஊராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள குளத்து நீரையும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கோடை வெயிலின் காரணமாக குளம் வறண்டுவிட்டது. இதனால் அப்பகுதியில் குடிநீர் பிரச்னைையும் நிலவு வருகிறது. பருவ மழை தொடங்குவதற்கு முன்பு இந்த குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் அரக்கோணம்-கீழ்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறை பிடித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ஆதியம்மாள், ஒன்றிய கவுன்சிலர் சுமதி, ஊரக வளர்ச்சி துறையினர், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குளத்தை தூர்வாரி சீரமைக்கவும், குடிநீர் பிரச்னையை தீர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையேற்று சாலை மறியலை கைவிட்டனர். மேலும் அரசு பஸ்சையும் விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: