பட்டிவீரன்பட்டியில் சிறுத்தை நடமாட்டம்?.. பொதுமக்கள் பீதி

 

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டியில் சிறுத்தை நடமாடியதாக எழுந்த தகவலால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி நகரம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள காவல்நிலையம் எதிரே தென்றல் நகர் உள்ளது. இப்பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாடுவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வத்தலக்குண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் வனக்காப்பாளர் கணேசன் தலைமையிலான குழுவினர், அப்பகுதிக்கு சென்று விலங்குகளின் தடயங்களை ஆய்வு செய்தனர். இதில், சிறுத்தை நடமாடியதற்கான அறிகுறி தென்படவில்லை.

மேலும் அப்பகுதி சிசிடிவி பதிவுகளிலும் சிறுத்தை தென்படவில்லை. இருப்பினும், வனத்துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் கண்காணித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருந்து வெளியேறிய கடமான் ஒன்று, உணவு தேடி பட்டிவீரன்பட்டி நகருக்குள் புகுந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் கடமானை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர். இந்நிலையில் சிறுத்தை நடமாடியதாக எழுந்த தகவலால் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

Related Stories: