பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிவு பாதிப்பு பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

 

சென்னை: பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு காரணமாக பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் புனித பீட்டர் பால் கடல் உணவுப்பொருள் பதப்படுத்தும் தனியார் ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. இங்கு கடல்வாழ் உயினங்களான மீன், இறால், நண்டு போன்றவற்றை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த தொழிற்சாலையை சென்னை வண்ணாரபேட்டையை சேர்ந்த மோகன், அவரது தம்பி ஜோசப்ஜெகன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். 2 ஷிப்டுகளாக 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 120 பேர் பணியாற்றியபோது, ஆண்கள், பெண்கள் என 74 பேர் அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டனர். மஞ்சங்காரணை, செங்குன்றம் பகுதி தனியார் மருத்துவமனைகளிலும் சென்னை ஸ்டான்லி, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டனர். இவர்களில் முதல் நாள் ஜுமானி ஜுவாங் (19), மாலோதி (20) ஆகிய 2 பேர் இறந்தனர். நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கீதாஜங்கா, ஷிபானி, பூர்ணிமா, திலோமினி, பர்மாதி ஜிங்கா, கீதா ஆஸ்தா ஆகிய 6 பேர் இறந்தனர். நேற்று காலை அசாம் மாநிலத்தை சேர்ந்த ஏஞ்சலா சோரன் (20) என்பவரும், இன்று காலை சுபாசிஜங்கா (24) என்பவரும் உயிரிழந்தனர். தற்போது பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

 

Related Stories: