×

மும்பையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை ; தாதர் ரயில் நிலையத்தை சூழ்ந்த மழை நீர்

மும்பை: மும்பையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக அந்த நகரின் சாலைகள் வெள்ளக்காடாக மாறியது. முக்கிய சாலைகளில் குளம் போல தண்ணீர் தேங்கியதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 செ.மீ மழை கொட்டியுள்ளது. குறிப்பாக நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரையிலான 8 மணி நேரத்திற்குள், நகரின் பல பகுதிகளில் 200 மி.மீ-க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மலாட் பகுதியிலுள்ள மல்வானியில் 271 மி.மீ மழை பதிவானது; அதைத் தொடர்ந்து போவாய் (247 மி.மீ), காந்திவலி பகுதியிலுள்ள சார்கோப் (244 மி.மீ) மற்றும் போரிவலி (234 மி.மீ) ஆகிய இடங்களில் மழை பதிவாகியுள்ளது.

மும்பை, தானே, ராய்காட், பால்கர் மற்றும் சிந்துதுர்க் ஆகிய பகுதிகளில் மிதமான முதல் தீவிரமான மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. தாதர் ரயில் நிலையத்தை மழை நீர் சூழ்ந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. மும்பை முழுவதும் பெய்த கனமழையைத் தொடர்ந்து, தாதர் ரயில் நிலையத்தை வெள்ளநீர் சூழந்துள்ளதுடன், ரயில் தண்டவாளங்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன.

இன்று அதிகாலை பெய்த பலத்த மழையால் நகரின் பல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஹிந்த்மாதா, அந்தேரி சுரங்கப்பாதை, மலாட் சுரங்கப்பாதை மற்றும் சியோனின் சில பகுதிகள் போன்ற முக்கிய இடங்களில் தண்ணீர் தேங்கியதாகவும், எனினும் உடனடியாக மழைநீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Tags : Mumbai ,Dadar railway station ,
× RELATED தமிழக சட்டப்பேரவை நிகழ்வு;...