ஆரணி, ஜூன் 23: ஆரணி அருகே கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளையடித்த 4 முகமூடி ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் சாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி நிலா. இவருக்கு சில தினங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இதனால் அவர், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள தாய் வீட்டில் உள்ளார். குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி நடந்தது. இதனால் முனுசாமி, தனது மாமியார் வினோலியாவுடன் ஆரணிக்கு வந்து வெள்ளி கால்கொலுசு, அரைஞாண் கயிறு ஆகியவற்றை வாங்கிக்கொண்டு சேத்துப்பட்டுக்கு பைக்கில் சென்றார்.
நெசல் அருகே சென்றபோது, முகமூடி அணிந்து 2 பைக்குகளில் வந்த 4 பேர் கும்பல், முனுசாமி, அவரது மாமியாரை கத்தியை காட்டி மிரட்டி 1 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதேபோல் ஆரணி அடுத்த மேட்டுக்குடிசை கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி காமாட்சி. இவர்கள் கடந்த 20ம் தேதி ஆரணிக்கு சொந்த வேலையாக சென்றுவிட்டு பின்னர் பைக்கில் ஊருக்கு திரும்பினர். தச்சூர் முருகர் கோயில் மலைக்குன்று அருகே சென்றபோது, முகமூடி அணிந்து பைக்கில் வந்த 4 ஆசாமிகள், தம்பதியிடம் கத்தியை காட்டி மிரட்டி 1 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் தனித்தனியாக புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எஸ்பி தனிப்படை மற்றும் ஆரணி டிஎஸ்பி சுரேஷ் சண்முகம் தலைமையிலான தனிப்படையினர், தாலுகா இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் மற்றும் போலீசார், மர்மநபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கன்ராயன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மொழுகம்பூண்டி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் ஆரணி அடுத்த பையூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த வினோத்(39), வினோத்குமார்(35), ஆரணி அம்பேத்கர் நகரை சேர்ந்த விவேக் என்கிற மணிசேகரன்(36), சேவூரை சேர்ந்த அசோக் என்கிற குமார்(35) என்பதும், இவர்கள் ெநசல், தச்சூர் பகுதியில் கத்தியை காட்டி நகை, பணம் பறித்தவர்கள் என தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து, 2 சவரன் நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் நேற்று காலை ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் இதேபோல் வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
