கரூர், ஜூன். 23: கூட்டுறவு சங்கம் மூலம் உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக கலெக்டர் தெரிவித்தார். கரூர் மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 85 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்கள் மூலமாக ஆண்டு தோறும் சுமார் 27500 விவசாயிகள் வேளாண் கடன் பெற்று வருகின்றனர். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் யூரியா ,பொட்டாஷ், பாஸ்பேட் மற்றும் கலப்பு உரம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வேளாண் கடன் பெறும் விவசாயிகளுக்கு வேளாண் கடனுக்கான உரப் பகுதிக்கு மேற்குறிப்பிட்ட உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், இச்சங்கங்கள் மூலம் இயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேற்கண்ட இயற்கை உரங்களை விவசாயிகள் தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே பெற்றுக்கொள்ளலாமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.
