×

டீசல்,ஆயில்,உதிரி பாகங்கள் விலையேற்றம்: ஜேசிபி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

 

மொடக்குறிச்சி ஜூன்23: டீசல், ஆயில், உதிரி பாகங்கள் விலையேற்றம் மற்றும் வாடகை உயர்வை வலியுறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நேற்று முதல் மூன்று நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு காரணமாக பல்வேறு பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜேசிபி இயந்திரங்களை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் டீசல்,ஆயில், உதிரி பாகங்கள் மற்றும் இன்சூரன்ஸ், டேக்ஸ் உள்ளிட்ட விலை ஏற்றத்தின் காரணமாக வாடகைகளை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக அவல்பூந்துறை வட்டார எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அவல்பூந்துறை அடுத்த சோளிபாளையத்தில் 50க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களை நிறுத்தி வைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் அவல்பூந்துறை, வெள்ளோடு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் நிறுத்தி வைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் பொக்லைன் வாகனத்தின் வாடகையை உயர்த்தி வழங்க கோரி நேற்று முதல் 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

அதன்படி, ஈரோடு தாலுகாவிற்கு உட்பட்ட வேப்பம்பாளையம் அருகே பொக்லைன் வாகனங்களை நிறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சங்க நிர்வாகி தங்கவேல் கூறுகையில், புதிய வாகனத்தின் விலை ஏற்றம், எரிபொருள், உதிரி பாகங்கள், இன்சூரன்ஸ் வரி ஏற்றம் போன்ற காரணத்தினால் எர்த் மூவர் தொழில் நலிவடைந்து வருகிறது. பொக்லைன் வாகன வாடகை உயர்த்தப்படாமலேயே இருந்தது. தற்போது ஒரு மணி நேரத்துக்கு, 1,100 முதல், 1,200 ரூபாய் என நிர்ணயித்து வாடகையாக பெறுகிறோம். இதனால் கடும் நஷ்டத்தை சந்திக்கிறோம். இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திடும் வகையில், வாடகையை ஒரு மணி நேரத்துக்கு, 1,500 ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்க கோரி 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இநத் போராட்டம் வருகிற 24ம் தேதி வரை நடைபெறும், என்றனர்.

Tags : JCB ,Modakkurichi ,Earth ,Tamil Nadu ,
× RELATED வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 3 பவுன் தங்க செயின் பறிப்பு