ஈரோடு, ஜூன் 23: ஈரோடு கனிமார்க்கெட் வணிக வளாகத்தில் காலியாக உள்ள 150 கடைகளுக்கு பொது ஏலம் நடத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கனிமார்க்கெட் வணிக வளாகத்தில் 400க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில், 113 கடைகள் முன்னுரிமை அடிப்படையில், ஜவுளி வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட கடைகள் பொது ஏலம் மூலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், 150க்கும் மேற்பட்ட கடைகள் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் மூடப்பட்டது. இதன் காரணமாக, மாநகராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஈரோடு மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், கனிமார்க்கெட் வணிக வளாகத்தில் உள்ள கடைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வராதது வருவாய் இழப்பாகும். எனவே, மாநகராட்சி நிர்வாகம் பொது ஏலத்தை உடனடியாக நடத்தி, கனிமார்க்கெட் வணிக வளாகத்தில் உள்ள கடைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
